Category Archives: பாடல் பெறாதவை

முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பி.வி.களத்தூர்

அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பி.வி.களத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 97890 49704, +91- 99624 67355

காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகரை முன்கூட்டியே தொடர்பு கொண்டால் பிற நேரங்களில் சுவாமியைத் தரிசிக்கலாம்.

மூலவர் முன்குடுமீஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வில்வ தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பொன்விளைந்த களத்தூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இக்கோயிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவிக்குப் போட்டுவிட்டு அழகு பார்த்தார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையைக் கோயிலுக்கு எடுத்து வந்தார். சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அதுஎனப் பொய் சொல்லிவிட்டார். மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக முன்குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், “முன்குடுமீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை.

+91- 452-234 9868, 234 4360

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்
அம்மன் மரகதவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பக்குளம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் தெப்பக்குளம், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

ஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதைக் கீழே வீசியது. புனிதம் மிக்க மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தியதால் கோபம் கொண்ட முனிவர், சாபமிட்டார். இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான், ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த இங்கு சிவனைப் பூஜித்தது. மனம் இரங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில், இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் ஆலயம் எழுப்பினார்.