Category Archives: பாடல் பெறாதவை

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி, சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
அம்மன் ஆனந்தவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நெமிலிச்சேரி
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சித்தராகவும், சிவபித்தராகவும் இருந்து பல இடங்களில் ஈஸ்வரனை இலிங்க வடிவில் ஸ்தாபித்து பூஜை செய்தார் அகத்தியர். பின்னாளில் அந்த இலிங்கம் அமைந்த இடமே இறைவன் உறையும் பெரிய திருத்தலங்களாக மாறிவிட்டன. இப்படி அகத்திய முனிவரால் இலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட தலங்களுள் ஒன்று, நெமிலிச்சேரி, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.

நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம். இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார். ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருவதால், நமது வாழ்வில் ஏகபோக மகிழ்ச்சிகள் உருவாக அருள்பாலிப்பவராக விளங்குகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.

அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர்

அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம்.

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளீஸ்வரர்
அம்மன் சிவகாமசுந்தரி
தலவிருட்சம் வில்வமரம்
தீர்த்தம் ஹோம குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் வில்லியநல்லூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

ஒவ்வொரு யுகத்தில் தெய்வ அவதாரங்கள் வெவ்வேறு வகையில் நிகழும். அப்படி ஒரு யுகத்தில்தான் கண்ணுதற் கடவுளுக்கும் முன்பாகவே பிறந்துவிட்டார் கணேசன். அதன்பின்னர், பார்வதி கேட்ட வரத்தின்படி முதற்கடவுளே அவளது மூத்த மகனாகவும் அவதரித்தார். முதல் யுகத்தில்தான் சிவபார்வதி கல்யாணத்தை தாமே வேதியராக இருந்து நடத்தி வைத்திருக்கிறார் விநாயகர். அந்தக் கல்யாணம் நடந்த தலம் திருமணஞ்சேரி. மகேசனுக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடத்தி வைக்க பிள்ளையார் வந்தபோது, அவர் இங்கேயே தங்கி நீராடி, நியமநிஷ்டைகளோடு தினசரி பூஜைகள் செய்தது, இத்தலத்து ஈசனுக்குத்தான். இன்னொரு விசேஷம் இங்கே பிள்ளையார் தனியாக இல்லை. இரட்டை வடிவெடுத்து தானே தன்னுடன் இருக்கும் இரட்டைப் பிள்ளையாராக காட்சி தருகிறார். ஒரு வடிவில் இங்கே சிவபூஜை நடத்திய கணபதி. மற்றொரு வடிவில் திருமணஞ்சேரியில் நடந்த உமா மகேசர் திருமணத்தில் வேதியராக இருந்தாராம். எனவே இரட்டை வடிவம்.

காளீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வெகு அருகிலே தனிக் கோயில் கொண்டிருக்கிறார், இந்தத் தந்தமுகன். இவர் கோயிலருகே இருக்கும் குளம், ஹோமம் நடத்துவதற்குரிய புனித நீருக்காக கணபதியால் அமைக்கப்பட்டது. அதனால் ஹோம குளம் என்றே பெயர். சிவபார்வதி திருமணம் நடந்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அசுர சக்திகள் பல அதனைத் தடுத்திட முயன்றனவாம். அப்போது அம்பிகை விஸ்வரூபக் காளி வடிவெடுத்து அந்தத் தீய சக்திகளை அழித்தாள். அதன்பிறகும் கோபம் தணியாமல் இருந்த அவளை, ஈசன் மையலோடு நோக்கினார். அந்தப் பார்வை கண்டு நாணிய அம்பிகை சிறிய வடிவுக்கு மாறி, குளிர்ந்த நிலவு போல் ஆனாள். சிவனின் விருப்பத்திற்கு உரியவள் என்பதால் சிவகாமசுந்தரியானது அவளது திருநாமம்.
காளியை சினம் தணியச் செய்ததால் இவரது திருநாமம் காளீஸ்வரர் என்று ஆனது.