முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை.

+91- 452-234 9868, 234 4360

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்
அம்மன் மரகதவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பக்குளம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் தெப்பக்குளம், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

ஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதைக் கீழே வீசியது. புனிதம் மிக்க மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தியதால் கோபம் கொண்ட முனிவர், சாபமிட்டார். இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான், ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த இங்கு சிவனைப் பூஜித்தது. மனம் இரங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில், இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் ஆலயம் எழுப்பினார்.

இங்கு தெட்சிணாமூர்த்தி, பிரகார கோஷ்டத்தில் அமைந்ததோடு மட்டுமின்றி சிவனுக்கு முன்புறமுள்ள தூணில் கையில் வீணை கொண்டு, “வீணை தெட்சிணாமூர்த்தியாகஉள்ளது சிறப்பு. இவரை வணங்கிட கல்வி, கேள்வி மற்றும் இசைஞானம் பெற்று சிறக்கலாம் என்பது நம்பிக்கை.

மாரியம்மன் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள இத்தலத்திற்கு, தெப்பமையத்தில் உள்ள மண்டபத்தின் விமானமே கோபுரமாக அமைந்துள்ளது. ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம். முன்புறம் உயரமான நந்தி, நடராஜர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்க்கை, விநாயகர் ஆகியோரும் உள்ளனர். கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள், சிறப்பாக உள்ளன.

இங்குள்ள தலவிநாயகர் சித்தி விநாயகர். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்தலாம். இதன் மூலம் அவர்கள் கண்ட கனவை நனவாக்கலாம் என்பது நம்பிக்கை.

பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங் களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.

திருவிழா:

மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடி, தை மாதத்தில் விளக்கு பூஜை. பிரதோஷ பூஜை இங்கு சிறப்பு.

பிரார்த்தனை:

இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்கள் கண்ட கனவுகள் நிறைவேறவும், எண்ணிய செயல்கள் நடைபெறவும் இங்குள்ள இரண்டு வில்வமரங்களில் வடமேற்கே உள்ள வில்வமரத்தின்கீழ் உள்ள விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் 48 நாட்கள் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

வழிகாட்டி :

மதுரை மத்திய பஸ்ஸ்டாண் டிலிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் கோயில் அமைந்துள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணியிலிருந்து பஸ்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *