Tag Archives: மதுரை

அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், பந்தடி 5வது தெரு, விளக்குத்தூண், மதுரை-625 001. மதுரை மாவட்டம்.

+91- 92451 45226 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நவநீத கிருஷ்ணர்
தாயார் மகாலட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

நவநீதம்என்றால் வெண்ணெய்எனப்பொருள். தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஏ மனிதனே! நீ தண்ணீரில் கலக்கும் பால் போல் அல்லாமல், அந்த பாலில் இருந்து பிறந்து அந்த பாலிலேயே கலக்க மறுக்கும் வெண்ணெயைப் போல், ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இந்த பூமியில் வாழ். பிருந்தாவனத்து கோபியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, எப்படி என்னை வந்தடைந்தார்களோ, அப்படியே வந்துசேர்என்று உணர்த்தவே, அவன் பூமியில் அவதரித்தான். வெண்ணெய் திருடினான். ஆம். உலகப்பற்று இல்லாமல், அவனையே எண்ணிக்கொண்டிருந்த மனிதர்களுக்கு அவன் மோட்சம் தந்தான். அவனை அடைய மறுத்து வெறுத்த கம்சன், சிசுபாலன், துரியோதனன், போன்றவர்களைக் கட்டாயப்படுத்தி மோட்சத்திற்கு அனுப்பி கருணாமூர்த்திஎன பெயர் பெற்றான்.

முன்மண்டபத்தில் இராமர், சீதை, இலட்சுமணர் சன்னதி உள்ளது. இச்சன்னதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெயுடன், சிரித்த முகத்துடன், பாலகனாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகிலேயே உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்திலும் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது.

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை– 625001.
***********************************************************************************************************
மதுரை மாவட்டம்.

+91 93441 18680 (மாற்றங்களுக்குட்பட்டது)

தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சுக் குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

கோயிலின் தல விருட்சம் ஆலமரம். ஆலமரத்துடன் வேம்பும் இணைந்து போட்டி போட்டு வளர்கிறது. அம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும் காலில் அரக்கனை மிதித்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும்.

ஆறடி உயரமுள்ள இந்த அம்மனைத் தரிசிக்கும் போது நமக்கு அது விக்ரகம் போல் தோன்றாது. ஒரு பெண் நேரில் நிற்பது போலவே தோன்றும்.

இத்தலத்திற்கு சென்றால் விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேசுவரர், மகாலட்சுமி, சரசுவதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகம், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரை ஒரே இடத்தில் தரிசித்து வரலாம்.