அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், பந்தடி 5வது தெரு, விளக்குத்தூண், மதுரை-625 001. மதுரை மாவட்டம்.

+91- 92451 45226 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நவநீத கிருஷ்ணர்
தாயார் மகாலட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

நவநீதம்என்றால் வெண்ணெய்எனப்பொருள். தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஏ மனிதனே! நீ தண்ணீரில் கலக்கும் பால் போல் அல்லாமல், அந்த பாலில் இருந்து பிறந்து அந்த பாலிலேயே கலக்க மறுக்கும் வெண்ணெயைப் போல், ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இந்த பூமியில் வாழ். பிருந்தாவனத்து கோபியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, எப்படி என்னை வந்தடைந்தார்களோ, அப்படியே வந்துசேர்என்று உணர்த்தவே, அவன் பூமியில் அவதரித்தான். வெண்ணெய் திருடினான். ஆம். உலகப்பற்று இல்லாமல், அவனையே எண்ணிக்கொண்டிருந்த மனிதர்களுக்கு அவன் மோட்சம் தந்தான். அவனை அடைய மறுத்து வெறுத்த கம்சன், சிசுபாலன், துரியோதனன், போன்றவர்களைக் கட்டாயப்படுத்தி மோட்சத்திற்கு அனுப்பி கருணாமூர்த்திஎன பெயர் பெற்றான்.

முன்மண்டபத்தில் இராமர், சீதை, இலட்சுமணர் சன்னதி உள்ளது. இச்சன்னதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெயுடன், சிரித்த முகத்துடன், பாலகனாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகிலேயே உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்திலும் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது.

சுவாமி சன்னதிக்கு பின்புறம் ஸ்ரீநிவாசப்பெருமாள், அலர்மேலுமங்கை தாயார் இருவரும் இருக்கின்றனர். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் சூரிய உதயத்தின்போது, தொடர்ந்து 3 மாதங்கள் ஸ்ரீநிவாசர் மீது சூரிய ஒளி விழுகிறது. தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது, 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர். இந்தக் கோயிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் கண்டால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாகப் பெருமாள் கோயில்களில் நவக்கிரக சன்னதி வைக்கப்படுவதில்லை. கண்ணன், காளிங்கன் என்ற நாகத்தின் மீது நின்று ஆடி, அதற்கு முக்தி கொடுத்தார் என்பதால், இங்கு ராகு, கேது கிரகங்கள் மட்டும் சிலை வடிவில் உள்ளன.

இக்கோயில் கட்டும்போது கிடைத்த மகாகணபதி, முன்மண்டபத்தில் இருக்கிறார். சன்னதி முன்புறம் உள்ள தூணின் இடதுபுறம் ஆஞ்சநேயர், வலதுபுறம் கருடாழ்வார் இருவரும் துவாரபாலகர் போல இருக்கின்றனர். மற்றொரு தூணில் ஜெய, விஜயர்களும் உள்ளனர்.கோயிலுக்கு வெளியே மதுரையின் காவல் தெய்வம் கருப்பசாமியை, சாட்டை ரூபத்தில் வைத்துள் ளனர். அரிவாள், கதை ஆகிய ஆயுதங்களும் இந்த சன்னதியில் உள்ளன.

திருவிழா:

கோகுலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி.

பிரார்த்தனை:

கிரகங்கள் சார்ந்த தோஷம் உள்ளவர்கள் ராகு, கேதுவிற்கு பூஜை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

பிரகாரத்தில் உள்ள நாகர் சன்னதியில் மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

புத்திரதோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்க்கரை பொங்கல், அவல் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

வழிகாட்டி :

மதுரை தவிட்டுச்சந்தை பஸ்ஸ்டாப்பில் இறங்கி, பந்தடி 5வது தெருவிலுள்ள கோயிலுக்கு நடந்தே சென்றுவிடலாம். மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் செல்கின்றன.

அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *