Monthly Archives: March 2012

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சாத்தனூர்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சாத்தனூர், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

காசிவிஸ்வநாதர்

தாயார்

விசாலாட்சி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

சாத்தனூர்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

திருக்கயிலாயத்தில் இருந்து யாத்திரையாகப் பல தலங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்த சிவனடியார் ஒருவர், காவிரிக்கரையோரம் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்தார். அங்கே, மேயச்சலுக்கு வந்த பசுக்கள், ஓரிடத்தில் பெருங் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அருகில் வந்து பார்த்தால் சிவனடியாருக்கு அதிர்ச்சி. எல்லாப் பசுக்களின் கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்து கொண்டிருந்தது. இன்னும் அருகே வந்த சிவனடியார், பசுக்களின் கூட்டத்துக்கு நடுவே எட்டிப் பார்த்தார்; அதிர்ந்து போனார். அங்கே, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தவன், ஏதோ விஷ ஜந்து தீண்டி இறந்து போயிருந்தான். ஐந்தறிவு உயிர்கள், வாயில்லா ஜீவன்கள் இந்தப் பசுக்கள். இத்தனை நாளும் தங்களைத் தொட்டுத் தடவிக் குளிப்பாட்டியவன், தங்கள் பசியறிந்து உணவு கொடுத்தவன், காடு மேடுகளைக் கடந்து கவனமாகவும் கரிசனத்துடனும் மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தவன், இருள் கவியத் துவங்கியதும் ஜாக்கிரதையாக, பத்திரமாக இப்பிடத்துக்கு அழைத்துச் சென்றவன் இறந்துக்கிடக்கிறானே என அந்தப் பசுக்கள் கலங்குவதை உணர்ந்து சிலிர்த்தார் சிவனடியார். நெற்றியில் விபூதி பூசியிருக்கிறான்; கழுத்தில் உருத்திராட்சம் அணிந்திருக்கிறான், நம்மைப் போலவே இவனும் சிவபக்தியில் திளைத்தவன்போல என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பசுக்கள் இறந்துகிடந்த தங்கள் மேய்ப்பனையும் வந்திருக்கும் சிவனடியாரையும் மாறி மாறிப் பார்த்தன.

அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை

அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 98658 04862, 94436 78579,+91-435-240 2660

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மஞான புரீஸ்வரர்

தாயார்

புஷ்பவல்லி

தீர்த்தம்

சந்திர புஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

கீழக் கொருக்கை

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது, இத்தலத்திற்கு வந்தார். ஒரு மடத்தில் அவர் தங்கினார். அங்கு ஏற்கனவே பல பக்தர்கள் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டவே, கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அருகில் ஒரு பெண் படுத்திருப்பதையும், அவளது சேலைத் தலைப்பு தன் மேல் கிடப்பதையும் கண்டு மிகவும் வருந்தினார். இதற்கு பிராயச்சித்தமாக தன் இரு கைகளையும் வெட்டி விட்டார். பின் அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, வெட்டுப்பட்ட கைகளால் தாளம் போட்டு, ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவன். சிவனின் அருளால் சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை எனவும், தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொருக்கை என மாறி விட்டது.