Monthly Archives: January 2012

அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி

அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி, நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 98422 94416 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)
அம்மன் அழகிய நாயகி (சவுந்தர நாயகி)
தல விருட்சம் நந்தியாவர்த்தம்
தீர்த்தம் சூரிய, சந்திர தீர்த்தங்கள்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவெண்ணியூர், கோயில்வெண்ணி
ஊர் கோயில்வெண்ணி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

முற்காலத்தில் இத்தலம் முழுவதும் கரும்புக்காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தனர். அப்போது இந்த கரும்புக் காட்டிற்குள் இறைவனின் திருமேனியை கண்டு தொழுதார்கள். அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர். இறைவன் அசரீரியாக தோன்றி,”எனது பெயரில் கரும்பும், தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்என்றருளினார். அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர்என அழைக்கப்பட்டார். இதுவே வடமொழியில் இரசபுரீஸ்வரர் ஆனது. தல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர்என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணிஆனது. மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது. இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.

சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது. கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது. இந்தப் பிடாரி அம்மனை வழிபடுபவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம். தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற்சோழனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தெரிகிறது.

அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம்

அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

91-4374-264 586, 4374-275 441, 94421 75441 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாதாளேஸ்வரர், பாதாள வரதர்
அம்மன் அலங்காரவல்லி, அலங்கார நாயகி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அரதைப்பெரும்பாழி
ஊர் அரித்துவாரமங்கலம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தன்னில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியைத் தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார். எனவேதான் இத்தலம் ஹரி(விஷ்ணு) துவார (பூமியை துளையிடுதல்) மங்கலம்(ஊர்)- “அரித்துவாரமங்கலம்ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். சிவன் பன்றியின் கொம்புகளுள் ஒன்றை முறித்து, தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனின் பஞ்ச ஆரண்ய (காடு)” தலங்களில் இதுவும் ஒன்று.