Monthly Archives: January 2012

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம்

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம், நாமக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சிவசுப்ரமணிய சுவாமி, பாலதண்டாயுதபாணி

(இரு மூலவர்)

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குருசாமிபாளையம்

மாவட்டம்

நாமக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

முருகக் கடவுளின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு, இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி வழிபட்டார். இதில் மகிழ்ந்த முருகப்பெருமான், அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பிறகு, வீரபாகுவின் வம்சத்தவர்கள், முருகப்பெருமான் தரிசனம் தந்த இடத்தில் சிறியதொரு கோயிலை அமைத்து வழிபடத் துவங்கினர். இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி மற்றும் பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின்போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட, விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி செழிக்கும் என்பது ஐதீகம். இங்கு ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி, துர்கை, சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை

அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்.

+91 4322 221084, 98423 90416 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சண்முக நாதன், ஆறுமுகம்
அம்மன் வள்ளிதேவசேனா
தல விருட்சம் விராலிச் செடி
தீர்த்தம் நாகத்தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சொர்ணவிராலியங்கிரி
ஊர் விராலிமலை
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இப்போது கோயில் இருக்கும் இடத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வருகிறார். அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, “விராலி மலைக்கு வாஎன்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்து விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார். அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது. திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்பது புரிந்து கொள்ளலாம்.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலைத்தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று. திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை. திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம்.