Monthly Archives: January 2012

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம்.

+91-4633-283201,226400,223029 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.15 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குமாரர்சுவாமி

உற்சவர்

இலஞ்சிக்குமாரர்

தலவிருட்சம்

மகிழம்

தீர்த்தம்

சித்ராநதி

ஆகமம்

மகுட ஆகமம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

இலஞ்சி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்றுகூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றினார் அவர் யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம்என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி, தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார்.

அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு

அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-479-2410690 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முருகன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஹரிப்பாடு
மாவட்டம் ஆழப்புழா
மாநிலம் கேரளா

சூரபத்மன் என்பவன் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். அவனை அழித்ததால், இரத்தம் பெருகி, ஒரு துளிக்கு ஒரு அசுரர் வீதம் உருவாகி உலகை நாசமாக்கினர். இத்தகைய மாயக்காரனான சூரனை அழிக்க ஏழு மாத குழந்தையால்தான் (தமிழகத்தில் சிறுவனாய் இருந்த போது சூரனை அழித்ததாகச் சொல்வோம். கேரளாவில், ஏழு மாதக் குழந்தை என்கிறார்கள்) முடியும் என்ற நிபந்தனையுடன் அவனுக்கு பிரம்மனால் வரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து உருவாக்கிய ஆறு பொறிகள் இணைந்து, கார்த்திகேயன் என்ற குழந்தை உருவாயிற்று. இக்குழந்தையை ஏழுமாதம் வரை பார்வதி பாதுகாத்தாள். பின்னர் இக்குழந்தை பற்றி அறிந்த சூரன் அதை அழிக்க வந்தான். விஸ்வரூபம் எடுத்த அக்குழந்தை சூரனை அழித்தது. பின்னர் வளர்ந்த அக்குழந்தை பல லீலைகளைச் செய்தது. தந்தைக்கே பாடம் கற்றுக் கொடுத்தது. படைக்கும் தொழிலை சிலநாள் ஏற்றுக் கொண்டது. பல தலங்களுக்கும் சென்றது. பரசுராமர் உருவாக்கிய கேரளாவிற்கு அக்குழந்தை சென்ற போது வெற்றி வீரரான அச்சிறுவனை வாழ்த்திப் பாடல்கள் பாடி வரவேற்றார் விஷ்ணு. அப்பாடல்கள் ஹரிப்பாடல்கள்எனப்பட்டன. அவர் பாடிய இடத்திற்கு ஹரிப்பாடுஎன்ற பெயர் உண்டாயிற்று. தன் மருமகனை அத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும்படி விஷ்ணு கேட்டுக் கொண்டதன்படி முருகன் அத்தலத்தில் அமர்ந்தார்.