Monthly Archives: January 2012

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம் மாவட்டம்.

+91- 427 – 240 064 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தண்டாயுதபாணி

உற்சவர்

சண்முகர்

தலவிருட்சம்

பொன்அரளி

தீர்த்தம்

குமரதீர்த்தம்

ஆகமம்

காரண ஆகமம், காமீக ஆகமம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

குமரகிரி

மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

நாரதர் கொடுத்த மாங்கனியைத் தனக்குத் தரவேண்டுமெனக் கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாகச் சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, “தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்குச் சென்றார். பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை. இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே பக்தர்கள் இவரை, “மாம்பழ முருகன்என்றும் அழைக்கிறார்கள்.

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம்

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்.

+91-4328 268 008, 99441 17450, 98426 99378

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை, வெள்ளி, கிருத்திகை நாட்களில் காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தண்டாயுதபாணி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பஞ்சநதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் செட்டிகுளம்
மாவட்டம் பெரம்பலூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், ஒரு இரவில் இங்கிருந்த அரச மரத்தின் மீது படுத்துக் கொண்டான். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்கவே விழித்தபோது, பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவலிங்கத்தை தேவர்கள் பூஜித்ததைக் கண்டான். ஆச்சர்யமடைந்தவன், மறுநாள் மன்னன் பராந்தகசோழனிடம் தகவல் தெரிவித்தான். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் இங்கு வந்தனர். இலிங்கம் இருந்த இடத்தைத் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது, கையில் கரும்புடன் அங்கு வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம், தான் சிவனின் இருப்பிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் இலிங்கத்தை காட்டிவிட்டு மறைந்து விட்டார். மன்னர்கள் வியந்து நின்றபோது, அருகிலிருந்த குன்றின் மீது முதியவர், கையில் கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகர பாண்டியன், மலையில் முருகனுக்கும், இலிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோயில் எழுப்பினான். சிவன் ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரராகக் காட்சி தருகிறார்.