அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம்.

+91-4633-283201,226400,223029 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.15 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குமாரர்சுவாமி

உற்சவர்

இலஞ்சிக்குமாரர்

தலவிருட்சம்

மகிழம்

தீர்த்தம்

சித்ராநதி

ஆகமம்

மகுட ஆகமம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

இலஞ்சி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்றுகூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றினார் அவர் யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம்என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி, தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார்.

அதன்பின், அவரை வணங்கிய மும்முனிவர்கள், “இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள் புரிந்தது போல, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து, விரும்பும் வரம் தருதல் வேண்டும்என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த குமாரர், இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

சிவபெருமானின் திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச்சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக் காண அவர் விரும்பிடவே, திருக்குற்றாலநகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும், நடனக்காட்சியும் அவருக்கு கிட்டும் எனக்கூறி அருள்புரிந்தார். அதன்படி, அகத்தியமுனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கோ சங்குவடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப் பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலேயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார். அவ்வாறு, மணலைக் குவித்து அகத்தியர் பூஜை செய்த இலிங்கம், இருவாலுக நாயகர் ( பெருமை பொருந்திய அகத்தியரால் வெண்மணல் கொண்டு செய்யப்பட்டவர்) எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அதன்பின், அவர் திருக்குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு அரியை, அரனாக மாற்றி வணங்கினார். இவ்வாறு சிவபெருமானை வழிபட அகத்தியருக்கு அருளியவராக இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திகழ்கிறார். இத்தலத்தில் இருக்கும் விநாயகர் செண்பகவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர், இளமைக்கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனும் குமாரரை வணங்கி அருள்பெற்றுச்சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணகிரியார் தனது திருப்புகழில் வரதராஜப்பெருமாள்என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார். இங்கு சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு தேவையான பால் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டே செய்யப்படுகிறது. குமாரரின் வாகனமான மயில் அவருக்கு இடது புறத்தில் வடக்கு நோக்கியபடி உள்ளது. குமாரருக்கு இடப்புறம் அகத்தியரால் மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன், இருவாலுகநாயகராகவும், அவரது உமையாள் இருவாலுக ஈசர்க்கினியாளாகவும் இருந்து அருள் புரிகின்றனர்.

திருவிழா:

சித்திரையில் 10 நாள், கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஆவணி பவித்ர உற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைபாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு முடிக்காணிக்கை செலுத்தி, பால் அபிஷேகம் மற்றும் விசேஷ அர்ச்சனை, ஆராதனைகள் செய்யப்பட்டு காவடி எடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் குழந்தைகளைத் தத்து கொடுத்து வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் மேற்குத் திசையில் ஏறத்தாழ 5 கி.மீட்டர் தூரத்தில் குற்றாலத்திற்கு வடக்கே உள்ளது இலஞ்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *