Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு கருப்பண்ண சுவாமி கோயில், ராங்கியம், உறங்காப்புளி

அருள்மிகு கருப்பண்ண சுவாமி கோயில், ராங்கியம், உறங்காப்புளி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருப்பண்ண சுவாமி, அங்காள பரமேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ராங்கியம் உறங்காப்புளி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இராமபிரான் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி திரும்பும் போது, பலரைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்களும் பின் தொடர்ந்தன. அவர் செல்லும் வழியில் ஒரு புளியமரத்தின் அடியில் தங்கினார். அந்தமரம் இரவு வேளையிலும் உறங்காமல் இருந்து அவரை பாதுகாத்தது. எனவே இந்த மரம் உறங்காப்புளிஎனப்பட்டது. இப்போதும் இங்குள்ள புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்குள்ள கருப்பசுவாமியும் அவரைப் பாதுகாத்தார். புளியமரத்தடியில் மந்திரமூர்த்தி எனப்படும் முத்துவீரப்ப சுவாமிகள், பொம்மணன், திம்மணன், ஆகாசவீரன் ஆகிய கருப்பசுவாமியின் தளபதிகளும் காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம் கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது.

பார்வதியின் தந்தை தட்சன், பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள்.

அருள்மிகு கருப்பண்ணசாமி கோயில், பொய்யேரிக்கரை

அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், பொய்யேரிக்கரை, ஈரோடு மாவட்டம்.

+91-424-221 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருப்பண்ணசாமி
தல விருட்சம்: வெள்ளை வேலாமரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பொய்யேரிக்கரை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது.

மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர். ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம், கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.