Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர்

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

+91- 4286 – 256 400, 256 401, 255 390

(மாற்றங்களுக்குட்பட்டவை)

அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரையில் தொடர்ந்து கோயில் திறந்திருக்கும்.

மூலவர் கருப்பசாமி
உற்சவர் நாவலடியான்
அம்மன் செல்லாண்டியம்மன்
தல விருட்சம் நாவல்
தீர்த்தம் காவிரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மோகனூர்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, இரவாகிவிட்டது. எனவே, இங்கேயே தங்கினர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை நாவல் மரத்தின் அடியில் வைத்துவிட்டு, தூங்கி விட்டனர். மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது, கல்லை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசுவாமி, தானே கல் வடிவில் இருப்பதாகவும், தன்னை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பும்படியும் கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து, கருப்பசாமியாகப் பாவித்து வணங்கினர்.
இவர் நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால் நாவலடியான்என்றும், “நாவலடி கருப்பசாமிஎன்றும் பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர். இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில் வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர்.

அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம்

அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.

+91- 99409 94548 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று முழு நேரம் கோயில் திறந்திருக்கும்.

மூலவர் பாறையடி முத்துக்கருப்பணர் (பாறையடி முத்தையா)
தீர்த்தம் பாறைடி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் உத்தமபாளையம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இந்த சிவனைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்தருளினார். காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனது. பின்னர், முத்துக்கருப்பண்ணரே பிரசித்தி பெற்றுவிட்டார். இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர், “பாறையடி முத்தையாஎன்று அழைக்கப்படுகிறார்.

மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, “ஐயாஎன்று அழைக்கிறார்கள்.