அருள்மிகு கருப்பண்ணசாமி கோயில், பொய்யேரிக்கரை

அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், பொய்யேரிக்கரை, ஈரோடு மாவட்டம்.

+91-424-221 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருப்பண்ணசாமி
தல விருட்சம்: வெள்ளை வேலாமரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பொய்யேரிக்கரை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது.

மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர். ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம், கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.

கோயிலின் வடக்கு பக்கமாக சென்றால் அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் முன்பகுதியில் விநாயகர், நாகர் சிலைகள் உள்ளன. தெற்கு பக்கத்தில் புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. அதன் பக்கத்தில் உள்ள புற்றுக்கண்ணை வழிபட்டு மேற்கு நோக்கி மண் பாதையில் சென்றால் இரும்புகளால் ஆன வேல்கள் பூமியில் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் பகுதியில் தூரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தூரியின் இடது புறம் இரண்டு குதிரைகள் சுதையும், இரண்டு முனியப்பசுவாமி சுதையும் வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மேடான பகுதியில் மூலஸ்தான கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்கள் சன்னதி உள்ளது. கருப்பண்ணசாமி மூர்த்தம் வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு வடக்கில் மர நிழலில் சர்ப்ப தேவதை மூர்த்தங்கள் உள்ளன. சிறிது தூரம் சென்றால் கிழக்கு பார்த்த விநாயகர் சன்னதி உள்ளது. இதனை வலம் வந்தால் பசுமையான மரங்களின் நடுவில் முருகன் சன்னதியை காணலாம். முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருக்கிறது.

தினசரி காலை, உச்சிகாலம், மாலை ஆக மூன்று கால பூஜை நடக்கிறது. இங்கு பண்டார இனத்தை சேர்ந்தவர்கள் வழி வழியாக முறையாக பூஜை செய்து வருகின்றனர்.

திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வருடாந்திர பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, இரண்டாம் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. வெள்ளிதோறும் உச்சிகால பூஜை செய்யும் போது பக்தர்கள் அதிகமாக கலந்து கொண்டு வழிபட்டு சுவாமி அருள் பெறுகின்றனர்.

வேண்டுகோள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *