Category Archives: ஈரோடு

அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில், சென்னிமலை

அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.

+91-4294 – 250223 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்ரமணியசுவாமி (தண்டாயுதபாணி)
அம்மன் அமிர்த வல்லி, சுந்தர வல்லி
தலவிருட்சம் புளியமரம்
தீர்த்தம் மாமாங்கம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர் புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
ஊர் சென்னிமலை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு, தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில், மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320. மலை 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது. மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சனத் தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி

அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி, ஈரோடு மாவட்டம்.

+91-4285-222 125 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பால தண்டாயுதபாணி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோபி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஆதார மூலக்கோயிலின் கால அளவை நிர்ணய படுத்த முடியாத அளவிற்கு ஆண்டவர் மலை முருகன் கோயில் பழமை வாய்ந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்குன்றில் குடிகொண்ட முருக பெருமானைப் போற்றி வணங்கி பூசாரி சித்தர் என்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னர் குப்பணசித்தர் என்பவர் காற்று ஆதாரத்துடன் பல காலங்கள் அருள் பாலித்து வந்தார். கடந்த 1980ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களாக கோயில் திருப்பணிகள் நடந்து 1990ம் வருடம் நிறைவு பெற்றது. ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புதத் தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.