Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை

அருள்மிகு கதிர்நரசிங்கப் பெருமாள், தேவர்மலை, கரூர்

ஒரு காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் ஊழ்வினை மற்றும் ஒற்றுமை இல்லாமை காரணமாக அனைத்தையும் இழந்து அதிகார உரிமை துறந்து அநாதரவாக நிற்பார்கள்.

பொருளாதாரத்தில் பெருமளவு அவர்கள் நசிந்து போயிருந்தாலும் ஒரு காலத்தில் பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் என்கிற காரணத்தால் அந்தக் குடும்படத்தின் பெருமையும், புகழும் என்றென்றும் உயர்ந்த மதிப்புடன்தான் இருக்கும். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கிராமங்களில் ஒரு சில குடும்பத்தினரை அடையாளம் காட்டிப் பேசுவார்கள். அதுபோன்ற குடும்பங்களில் சிலது இருக்கும். சிலது இருக்காது. உதாரணத்துக்கு அவர்களிடம் புகழ் இருக்கும். பொருளாதாரம் இருக்காது. அன்பு இருக்கும், அதிகாரம் இருக்காது. உண்மை இருக்கும், ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். வரலாறு இருக்கும். வசதிகள் இருக்காது.

கரூர் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் ஆலயமும் கிட்டத்தட்ட இந்த ரகம் என்றே சொல்லலாம். அதாவது ஒரு காலத்தில் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அனைத்து உற்சவங்களும் விமரிசையாக நடந்து வீதிகளில் பிரமாண்ட தேர் ஓடி, பக்தி மழையில் திளைத்திருந்த திருக்கோயில்தான் இது. ஆனால் இன்று நிலை வேறு.

பவித்திரம் இருக்கிறது. பக்தர்கள் இல்லை. குறையாத சாந்நித்யம் இருக்கிறது; கோலாகல உற்சவங்கள் இல்லை. ஆன்மிக மனம் அளவில்லாமல் கமழ்கிறது. மணம் வீசும் மடப்பள்ளி இல்லை.

அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோயில், வி.மேட்டுப்பட்டி

அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோயில், வி.மேட்டுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்,

ஒரு பக்தருக்கு வாழ்க்கையில் தீராத கஷ்டம். ஜோதிடரை பார்க்கும் நேரமெல்லாம், ஏழரைச் சனி என சொல்லிக்கொண்டே இருப்பார். சனீஸ்வரருக்கு எள் தீபத்தை வாரம் தவறாமல் ஏற்றினார். இருந்தாலும் கஷ்டம் தீரவில்லை. சனீஸ்வரன் விரட்டி விரட்டி அடித்தார். உணவுக்குக் கூட சிரமமாகிவிட்டது. அந்த பக்தர் கதிர் நரசிங்கர் குடியிருக்கும் கோயிலுக்குள் புகுந்து விட்டார். பெருமாளின் பாதுகாப்பில் இருந்ததால், சனீஸ்வரரால் உள்ளே நுழைய முடியவில்லை.

அவர் பெருமாளைப்பணிந்து, “அந்த பக்தரை வெளியே அனுப்புங்கள். அவர் அனுபவிக்க வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது. எனது கடமையை தடுக்காதீர்கள்” என வேண்டிக்கொண்டார். பெருமாளும் சனீஸ்வரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் “என்னை சரணடைந்த பக்தனுக்கு அதிக அளவில் துன்பம் கொடுக்க கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணவு வகையில் சிரமம் ஏற்படக்கூடாது“ என்றும் நிபந்தனை விதித்தார். அத்துடன், சனி திசை உள்ள பக்தர்கள் யாராக இருந்தாலும், இந்தக்கோயிலுக்குள் வந்துவிட்டால் அவரது சிரமங்களைக் குறைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

தலவிருட்சம்: சந்தனமரம்.

தீர்த்தம்:

பிரம்மதீர்த்தம். இந்த தீர்த்தத்தை தவளை படா தீர்த்தம் என்கிறார்கள். பாழ்பட்டு கிடக்கும் இதில் மீன்களோ, தவளைகளோ இன்று வரை வசித்ததில்லை.

இங்கு நம்மாழ்வார் அருள்பாலிப்பது சிறப்பு. நின்ற கோலத்தில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி புதிய சிலைகள் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

குழந்தை இல்லாத பெண்கள் இங்கு வேண்டி கொண்டால் மகப்பேறு நிச்சயம். கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால், பெருமாளின் மீது வைக்கும் சந்தனத்தை மாட்டுத்தீவனத்தில் கலந்து வைக்கிறார்கள். அவற்றிற்கு நோய் நீங்கி, பால் ஏராளமாக சுரப்பதாக நம்பிக்கை.

வழிகாட்டி:

திண்டுக்கல்லில் இருந்து சிலுவத்துப்பட்டி வழியாக 19கி.மீ. தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு 1சி, 2ஏ ஆகிய பஸ்கள் செல்கின்றன