Category Archives: தோஷ நிவர்த்தி தலங்கள்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, புதுச்சேரி.

+91- 4368 – 265 693, 265 691, 98940 51753 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
உற்சவர் வேடமூர்த்தி
அம்மன் சாந்தநாயகி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் தேவதீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புன்னகவனம்
ஊர் திருவேட்டக்குடி
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

மகாபாரதப் போரின்போது பாண்டவர்கள், கவுரவர்கள் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனர் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டித் தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினார் துரியோதனர். பன்றி வடிவில் வந்த அசுரன் அவரது தவத்தை கலைக்க முயன்றான். அர்ஜுனர் அசுரனை அம்பால் வீழ்த்தினார். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச்செல்ல முயன்றார். அர்ஜுனர் அவரிடம் பன்றியை தர மறுத்தார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?” என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “அர்ஜுனன் மஸ்யரேகை‘ (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.

ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், “உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதேஎன்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாகப் பிறக்கும்படி செய்துவிட்டார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்குழந்தையாக பிறந்தாள். சிவன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று மாப்பிள்ளை அழைப்புகொடுக்கின்றனர். அப்போது, மீனவர்கள் சிவனை, “மாப்பிள்ளைஎன்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்(திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4369 -250 238 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி
தல விருட்சம் வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் வேததீர்த்தம், மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமறைக்காடு
ஊர் வேதாரண்யம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

வடமொழி வேதங்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் என்ற நான்கும் மனித உருக்கொண்டு, இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி, அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை. இனி நாங்கள் இருப்பது நல்லதல்லஎன்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும், வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம்என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றிப் பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார். அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர், “சம்பந்தரே! இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும்என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறைஎன்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக்கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.