Category Archives: தோஷ நிவர்த்தி தலங்கள்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 435-244 9578 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 – இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அக்னிபுரீஸ்வரர்
அம்மன் கவுரி பார்வதி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅன்னியூர், திருவன்னியூர்
ஊர் அன்னியூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவபெருமானைப் புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து, தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாடத் தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து இலிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து, சாபம் நீங்க பெற்றான். வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் அன்னியூர்ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர்ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.

சிறிய கோயில். சிறிய இராஜகோபுரம். உள்நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்னி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால் சொறிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தி உள்ளார். வினாயகர், பாலசுப்ரமணியர், கஜலட்சுமி சன்னிதிகளும், தலமரம் வன்னியும் உள்ளன.

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடி

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடி, திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மங்களநாதர்
அம்மன் மங்களாம்பிகை
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சிறுகுடி
ஊர் திருச்சிறுகுடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனைத் தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வமரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் இலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார். இதனால் அம்பிகை மங்களாம்பிகைஎன்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை மங்கள தீர்த்தம்ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர்என்று பெயர் சூட்டப்பட்டது.

மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனைக் காப்பாற்றச் சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்துஎன சொல்லித் தடுத்தார். அப்போது, சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார். இக்கோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார். இவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.