அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்(திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4369 -250 238 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி
தல விருட்சம் வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் வேததீர்த்தம், மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமறைக்காடு
ஊர் வேதாரண்யம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

வடமொழி வேதங்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் என்ற நான்கும் மனித உருக்கொண்டு, இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி, அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை. இனி நாங்கள் இருப்பது நல்லதல்லஎன்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும், வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம்என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றிப் பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார். அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர், “சம்பந்தரே! இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும்என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறைஎன்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக்கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.

இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகிஎனவும் தமிழில், “யாழைப் பழித்த மொழியாள்என்றும் வடமொழியில், “வீணாவாத விதூஷணிஎனவும் வழங்கப்படுகிறது. அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.

இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.

இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று. முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.


திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம். சப்தவிடத்தலங்களுள் இது இரண்டாவது தலம். சக்தி பீடங்கள் 64 ல் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில். மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு. 63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர். ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன. அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம். மனு, மாந்தாதா, தசரதன், இராமன், பஞ்சபாண்டவர், மகாபலி முதலியோர் வழிபட்ட தலம். பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம். புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார். தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இவ்வூரைச் சேர்ந்தவர். இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்துதான் பயன்படுத்தப்படுகிறது.

இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமபிரானைத் துரத்திவந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு. இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத இலிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த இலிங்கம் இது. வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.

ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கியது. முன் மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னி உள்ளது. அதன் அடியில் எண்ணற்ற நாகப்ப்ரதிஷ்டைகள். எதிரில் தீர்த்தமுள்ளது. உள்சுற்றில் அறுபத்துமூவர், இராமநாதலிங்கம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் இராமரைத் தொடர்ந்து வந்த வீரகத்தி தோஷத்தை நீக்கிய வீரகத்தி வினாயகர், குமரன் சன்னிதி ஆகியன உள்ளன. சேர, சோழ, பாண்டிய இலிங்கங்கள் தனித்தனி சன்னிதியாக உள்ளன. புன்னை மரத்தடியில் நசிகேது, ஸ்வேதகேது ஆகியோரின் உருவங்களைக் காணலாம். சுவாமிக்கருகில் அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக உள்ளது. உள்வலமாக வரலாம். முன்மண்டபத்தின் மேற்புரம் வண்ண ஓவியங்கள் உள்ளன. தலவினாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜுரதேவர், சனிபகவான், வீணையிலாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்கை, சோழீஸ்வர இலிங்கம் ஆகியன உள்ளன. இங்குள்ள நடராஜ சபை தேவசபை எனப்படும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் வரிசையாக உள்ளன. ஏனெனில் இது ஒரு கோளிலித்தலமாகும். பள்ளியறையை அடுத்து பைரவர், சூர்ய சந்திரர் சன்னிதிகள் உள. உள்வலமுடித்துப் படிகளேறி முன்மண்டபத்தை அடைந்தால் தியாகராஜ சபை. விடங்கர் பெட்டிக்குள் பாதுகாப்பாக உள்ளார். உள்வாயிலைக்கடந்தால் உற்சவத்திருமேனிகள் இருபுறமும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சுதையாலான துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் வேதாரண்யேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி. சுவாமிக்குப் பின்னால் மறைக்காட்டுறையும் மணாளர் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் சோழர் காலத்திய கல்வெட்டுகள் 92 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறைவனை வேதவனமுடையார் என்று குறிப்பிடுகிறது.

தேவாரப்பதிகம்:

யாழைப்பழித் தன்னமொழி மங்கைஒரு பாகன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்பேணில் தாழைப்பொழில் ஊடேசென்று பூழைதலை நுழைந்த வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 125வது தலம்.

திருவிழா:

மாசி மகம் பிரம்மோற்சவம் – 29 நாட்கள் திருவிழா அடைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் திருவிழா நடக்கும். இதில் மக தீர்த்தம் அன்று சுவாமி கடலுக்கு போய் தீர்த்தமாடி வருவது சிறப்பு – 73 மூவர் சுவாமி புறப்பாடும் கைலாச வாகனம் புறப்பாடும் நடக்கும். ஆடிப்பூரம் – 10 நாட்கள் இது அம்மனுக்கு நடக்கும் பெரிய அளவிலான திருவிழா ஆகும். விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி, மாதாந்திர பிரதோச நாட்கள், வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

பிரார்த்தனை:

இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும். இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும். பல ஆண்டுகள் யோகம், தானம், தவம் செய்த பலன்களை அடையலாம். இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர். மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.

வழிகாட்டி:

நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து நேரடி பஸ் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *