Category Archives: 108 திவ்விய தேசங்கள்

அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி

அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி – 628 612, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 முதல் 12 வரையிலும், மாலை 5.00 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்
உற்சவர் பொலிந்து நின்ற பிரான்
தாயார் ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் தாமிரபரணி, குபேர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆழ்வார் திருநகரி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றினார் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்ததைப் பார்த்த பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர். சடகோபரைக் கோயிலுக்கு அழைத்து வந்தனர். சடகோபர் ஓடிச்சென்று அங்கு இருந்த புளியமரத்தடியில் இருந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு அவரை அசைக்க முடியவில்லை. 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால், உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவியாழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால் மதுரகவிஆழ்வார் என புகழப்பட்டார். அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்தார் மதுரகவியாழ்வார். அந்த ஒளி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது. அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதைக் கண்டார் மதுரகவியாழ்வார்.
ஞான முத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார். “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்றார்.

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்– 609 801, திருவாரூர் மாவட்டம்.

+91-4366-233 041, 233 826 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள்
உற்சவர் கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி
தாயார் திருமாமகள் நாச்சியார்
தல விருட்சம் வில்வ மரம்
தீர்த்தம் திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சலசயனம், பாலவியாக்ரபுரம்
ஊர் திருச்சிறுபுலியூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இத்தலப் பெருமாளை நோக்கித் தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த சயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். நடராஜரை வணங்கும் வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.