Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி, தேனி மாவட்டம்.

+91-99944 98109 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சித்திரபுத்திரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோடாங்கிபட்டி
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

சிவன், ஜீவராசிகள் செய்யும் காரியங்களை கணக்கு எழுதுகிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அகில உலகிற்கும் மூல காரணமாகிய சிவன் ஏடும், எழுத்தாணியும் கொண்டு தாமே கணக்கு எழுதுவது இல்லை. அதற்காக ஒரு தேவதையை படைக்க எண்ணினார். ஒருமுறை அவர் சக்திதேவியை பார்க்க, பார்வையின் குறிப்பறிந்த அவள் ஒரு சித்திரம் வரைந்தார். அதற்கு இருவரும் உயிரூட்ட அதிலிருந்து தோன்றியவரே சித்திரபுத்திரர் ஆவார்.

இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், பராசக்தி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும், “சித்திரபுத்திரன்என்று அழைக்கப்படுகிறார். இருந்தாலும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது. இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை வழிபட்டு ஞானதிருஷ்டி பெற, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை சிவன் இவரிடம் ஒப்படைத்தார்.

இவர் பிறந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், நமது பாவங்களை குறைப்பார் என்பது நம்பிக்கை. இவரது மனைவி பிரபாவதிக்கு இங்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால் சித்ரா பவுர்ணமியன்று பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அன்று வாசலிலும், பூஜை அறையிலும் கோலமிட்டு, சித்திரகுப்த ஸ்லோகம் சொல்ல அவர் நமது இல்லத்துக்கு வந்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை.

சித்திரம் என்றால் ஆச்சரியமானது,” “குப்தம்என்றால் ரகசியம்என்று பொருள். எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதிவிடும் சித்திரபுத்திரரின், கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமாக இருக்கும். எனவேதான் இவர் சித்திரகுப்தன்எனப்படுகிறார்.

இத்தலத்திற்கு அருகில் ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில், ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சித்திரபுத்திர நாயனாருக்கு காஞ்சிபுரத்தை அடுத்து இங்கு மட்டும் தான் தனி கோயில் உள்ளது.

திருவிழா:

சித்ராபவுர்ணமி.

வேண்டுகோள்:

நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி. எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், தோஷம் நீங்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து, உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொள்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி, ஏரல்

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி, ஏரல், தூத்துக்குடி மாவட்டம்.

+91- 4630-271 281 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சேர்மன் அருணாசல சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஏரல்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

சேர்மன் அருணாசல சுவாமிகள், திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமிசிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் அவதரித்தார். இவரது பெற்றோர், பல கலைகளை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். அனைத்து கலைகளையும் கற்ற சுவாமிகள், ஏரல் என்ற ஊருக்கு வந்து மவுன விரதம் இருந்து பக்தி யோகத்தை கடைப்பிடித்தார். அவரைக்காண வந்த பொதுமக்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறி, அவர்களது பிரச்னைகளை தீர்த்து வந்தார். இவரது நீதியையும், நேர்மையையும், திறமையையும் கண்ட அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்கள், இவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாகப் பதவி ஏற்கும்படி வேண்டினார்கள். 1906, செப்டம்பர் 5ல் சேர்மனாக பதவி ஏற்றார். 1908, ஜூலை 27 வரை சேர்மனாக பணியாற்றிய அவர் சேர்மன் அருணாசலம்என்ற பெயரைப் பெற்றார். தனது 28வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு நல்லாசி கூறி, “தம்பி. நான் 1908, ஜூலை 28 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேருவேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிர பரணி ஆற்றின் வடகரை ஓரமாக நிற்கும் ஆலமரத்தின் அருகில் என்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடுங்கள். அப்போது மேலே கருடன் வட்டமிடும்என்று கூறினார். அதன்படியே அவர் இறைவனடி சேர்ந்தார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அன்று முதல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். நவ திருப்பதிகளும், திருச்செந்தூர் தலமும் அருகில் உள்ளன.