Category Archives: ஐயப்பன்

அருள்மிகு ஐயப்பன் கோயில், ஆரியங்காவு

அருள்மிகு ஐயப்பன் கோயில், ஆரியங்காவு, கொல்லம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 0475-221 1566, 94452 52368

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆரியங்காவு
மாவட்டம் கொல்லம்
மாநிலம் கேரளா

சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார். மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார். புஷ்கலா தன்னாலான கைங்கரியங்களைச் சாஸ்தாவுக்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார். திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார். அவன், “உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?” எனக் கேட்டதும், அவர் சம்மதித்தார். உடனேயே அவன் மறைந்து விட்டான். அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டார். மதகஜ வாகன ரூபனாக அவரைக் கண்ட வியாபாரி, “நீயே என் மகளை ஆட்கொள்ள வந்தாயா?” என அதிசயித்தார். பின்னர், தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 94434 94473, 94430 02731 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி 7 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா
தல விருட்சம் வில்வ மரம்
தீர்த்தம் யாக குண்ட தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சுசீந்திரம்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையைத் தடவ, கண்பார்வை கிடைத்தது. வியந்தவர் சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா” (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன்) என்று பெயர் பெற்றார்.

அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசூயா தன் கணவர் மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவளைப் போல பெண்கள் கணவருடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அனுசூயா அவர்களை சாப்பிட அழைத்தாள். நிர்வாண நிலையில் பரிமாறினால் தான் தாங்கள் சாப்பிடுவோம் என்று துறவிகள் நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்ட அனுசூயா சற்றும் கலங்கவில்லை. தன் கணவர் அத்திரியின் பாதத்தை பூஜித்த தீர்த்தத்தை கையில் எடுத்தாள். அதை மும்மூர்த்திகள் மீது தெளித்தாள். மூவரும் குழந்தைகளாயினர். பின்பு மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசூயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர். இவ்வாறு அத்திரி ஆஸ்ரமம் அமைத்து தங்கியதால் இத்தலம், “ஆஸ்ரமம்என்று அழைக்கப்பட்டு ஆஸ்ராமம் என திரிந்தது. அத்திரி உண்டாக்கிய தீர்த்தம், இக்கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இதை யாக குண்ட தீர்த்தம் என்கிறார்கள்.