Category Archives: ஐயப்பன்

அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான்

அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான், மும்பை.

கலியுக வரதன், கண்கண்ட தெய்வம் ஐயன் ஐயப்பன் பூவுலகில் ஆட்சி செய்யும் தலங்கள் பலப்பல. அப்படி மும்பையில் உள்ள மக்களும் ஐயப்பனை தரிசித்து அருள்பெற வேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் கோரேகான் ஐயப்பன் கோயில்.

முதன் முதலில் பக்தர்கள் சிலரால் இப்பகுதியில் விளக்கு பூஜை நடத்தப்பட்டது. பிறகு சொந்தமாக நிலம் வாங்கி கோயில் கட்ட தேவப்பிரசன்னம் வைத்துப் பார்த்து, அதன்படி கோயில் கட்டப்பட்டு ஐயப்பன், குருவாயூரப்பன், கணபதி, துர்க்காதேவி, சுப்ரமணியன் போன்ற விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கோயிலின் நுழைவாசலின் மேல் அனந்த பத்மநாபனின் திருவுருவம் சுதை வடிவமாகக் காணப்படுகிறது. அதற்கு மேலே உள்ள மாடங்களில் ஐயப்பன், குருவாயூரப்பன், கணபதியின் திருவுருவங்களும்; மேலே கலசங்கள், உயர்ந்த செப்புத்தகடுகள் வேயப்பட்ட கொடி மரமும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய மண்டபம். அதன் ஒரு பகுதியில் பெரிய மேடை ஒன்று காணப்படுகிறது. மேடை மீது ஏறிச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. மேடையில் தனித்தனி சன்னதிகள். ஐயப்பன் சன்னதியின் முன்பு பதினெட்டுப் படிகள் காணப்படுகின்றன. படிகளின் இரண்டு பக்கங்களிலும் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருக் கின்றன. ஐயப்பனின் மூல முகூர்த்தம், பஞ்சலோகத்தினால் ஆனது. சபரி மலைக்குச் சென்று ஐயனை தரிசிக்க இயலாத மனக்குறையை இந்த ஐயப்பன் தீர்த்து வைத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், நங்கநல்லூர்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் நங்கநல்லூர், சென்னை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து, அவர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புனிதப் பணியினை செய்து வந்தார் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். நாளடைவில் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்று செய்ய எண்ணம் கொண்டார். அதன்படி பக்தர்களின் கைங்கரியத்தால் ஐயப்பன் விக்ரகம் செய்யப்பட்டு பல வருடங்களாக குருசாமியின் இல்லத்திலேயே ஐயப்ப பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வந்தன. அழகான ரூபத்தில் அமைந்த ஐயப்பனுக்கோ தான் ஒரு தனிக் கோயிலில் அமர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க, பலரது எண்ணத்திலும் அது எதிரொலிக்க, தனிக் கோயில் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் வேறு பகுதியில் இடம் பார்த்து கோயில் கட்ட ஆரம்பிக்க, என்ன காரணத்தினாலோ அது தொடரமுடியாமல் போனது. உடனே குருசாமி சபரிமலையிலுள்ள மேல்சாந்தியை சந்தித்து விவரம் கூற பிறகு தேவபிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. தேவபிரச்னத்தில் ஐயப்பனே வந்து தாம் கோயில் கொள்ள விரும்பும் இடம் பிருங்கி முனிவர் தவமிருந்த சேத்திரம், அகத்தியர் வலம் வந்த பூமியென்றெல்லாம் கூற, அப்படி பிரச்சனத்தின் மூலமாக ஐயப்பன் வந்து அமர்ந்த இடம்தான் நங்கநல்லூர்.