Category Archives: கன்னியாகுமரி

அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருவட்டாறு

அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருவட்டாறு-629 177. கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 94425 77047 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிகேசவப் பெருமாள்
தாயார் மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம் கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவட்டாறு
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளைப் பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி, இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் வட்டாறுஎன அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்எனப் பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப்பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன.(இது வைணவர்களின்கூற்று. சைவர்களின் கதையோ வேறு). மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம்

முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து அவன் தலையைக் கொய்தார் முருகப்பெருமான். ஆனைத்தலை விழுந்த இடம் ஆலந்தலைஎன்று மருவி விட்டது. இவ்வூர் திருச்செந்தூருக்கு அருகில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிங்கமுக அசுரனையும் கல்லாமொழிஎன்னுமிடத்தில் வெற்றி கொண்டார். அக்காலத்தில் கல்லால மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்போது அவ்வூர் காயாமொழிஎனப்படுகிறது.

தன் உடன்பிறந்தவர்கள் இருவரையும் கொன்ற முருகனை மிக ஆவேசத்துடன் போருக்கு அழைத்தான் சூரபத்மன். சீறி வரும் பகையைத் தன் சிரிப்பால் அடக்கிடும் முருகப்பெருமான் வெற்றிப் புன்னகையுடன் வேலை சூரனின் மீது விடுத்தார். வேலால் குத்தப்பட்ட சூரனின் உடலிலிருந்து குருதி சிந்தியது. அசுரனின் ரத்தம் பூமியில் பட்டால் பூமாதேவியின் பொறுமை குணம் மாறிவிடும் என்று எண்ணி, முருகன் காளி தேவியை வேண்டினார். காளி உடனே வந்து சூரபத்மனின் ரத்தத்தைக் குடித்து வீரமனோகரிஎன்ற திருநாமத்துடன் அமர்ந்தாள்.

அவ்விடமே திருச்செந்தூரிலிருந்து 11கி.மீ. தொலைவில் அமைந்த குலசேகரன் பட்டினம் ஆகும். தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காக்கும் நோக்கில் இவ்விடத்தில் காளி வீரமனோகரியாக வீற்றிருக்கிறாள்.