Category Archives: அட்டவீரட்டானம்

அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர்

அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-4362-261 100, 262 222 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.

மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம்
ஊர் கண்டியூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர்

பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், “பிரம்மசிரகண்டீஸ்வரர்என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இது சப்தஸ்தான தலத்தில் ஒன்று.
இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், எத்தனை வேலை இருந்தாலும் காளகஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளகஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிரதோஷத்தன்று சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்கச் சென்றார். அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், “தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார். அறியாமை, மந்த புத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவதரிசனம் செய்வது நல்ல பலன் தரும்.

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365-22389 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேஸ்வரர்
உற்சவர் யோகேஸ்வரர்
அம்மன் ஞானம்பிகை
தல விருட்சம் கடுக்காய் மரம், அரிதகிவனம்
தீர்த்தம் திரிசூலகங்கை, பசுபதி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குறுக்கை
ஊர் கொருக்கை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். ஆனால் முருகனோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்க, கடைசியில் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தைக் கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட, தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார். ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது. உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கிப் பார்வையைச் செலுத்தினார். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. சாம்பலானான் மன்மதன். அதன்பின் இரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க, உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டுபண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார். அதுபடி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.

பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால், இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இறைவன் யோகேஸ்வரர்என்றும், அம்பாள் ஞானாம்பிகைஎன்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாகப் பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார். இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியன இத்தலத்தில் முக்கியமானவை.

யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும். அட்டவீரட்டத்தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்தார் என்பது வரலாறு. “காம தகன மூர்த்திஎன்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார். ராஜ கோபுரம் 5 நிலைகள் கொன்டது. எதிரில் சூல தீர்த்தம் உள்ளது. மேற்கு நோகிய சன்னிதி. கோபுரம் மிகவும் அழகான சிற்பங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. வாயிலின் உள்ளே துவார கணபதியும், சுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. வெளிச்சுற்றில் வேறு மூர்த்தங்கள் இல்லை. உள்ளே நுழைந்தால் இடப்புறம் முருகர் , கஜலட்சுமி ஆகியோரை தொடர்ந்து தல விசேடமாகிய காம தகன மூர்த்தி உள்ளார்.

அபய முத்திரையுடன் அழகாக காட்சியளிக்கிறார். எதிரே மன்மதன், ரதி ஆகியோர் உள்ளனர். மன்மதன் கையில் கரும்பு வில் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக ரதி மன்மதன், தக்ஷிணாமூர்த்தி, துர்கை ஆகியோர் உள்ளனர். இங்கு இரதி இறைவனை வேண்டுவதுபோல் சிற்பம் உள்ளது.

இவர்களை வலம் வந்து உட்சென்றால் இறைவன் சதுர ஆவுடையாரில் உயர்ந்த பாணத்தோடு அழகாக காட்சியளிக்கிறார். சுயம்புத்திருமேனி. மன்மதன் எறிந்த தாமரை பாணம் சுவாமி பீடத்தில் அடையாளமாக உள்ளது. அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். காமனைத் தகனம் செய்த இடம், இங்கு விபூதிக்குட்டை என்று ஒரு குளமாக உள்ளது. இதில் எங்கு எடுத்தாலும் திருநீறாகவே உள்ளது. இது ஒரு வியப்பாகும். இத்தலத்திர்க்கு யோகீசபுரம் , காமதகனபுரம் , கம்பகரபுரம் என பல பெயர்கள் உண்டு.

சம்காரத்தினால் பெயர் பெற்ற ஊர்கள் : இந்த திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி. வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம்.

அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம்.

தேவாரப்பதிகம்:

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று தருமரா சற்காய்வந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலம்.

திருவிழா:

மாசி மகம் காமதகன விழா – 10 நாட்கள் திருவிழா பிரம்மோற்சவம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும் திருவிழா பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு வீதியுலா.

மார்கழி மாதம் திருவாதிரை உற்சவம்சுவாமி புறப்பாடுஇதுவும் சிறப்பான விழா ஆகும்.. நவராத்திரி மற்றும் மாதாந்திர பிரதோசம் ஆகியனை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

கோரிக்கைகள்: இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் உடல் பலம் பெறும். நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.

நேர்த்திக்கடன்:

கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

வழிகாட்டி:

மயிலாடுதுறைக்கு பக்கத்தில் 12 கீ மீ தொலைவில் உள்ளது. மாயூரத்திலிருந்து குத்தாலம் செல்லும் சாலையில் பொன்னூர் வந்து அங்கிருந்து திருவாளப்புத்தூர் செல்லும் குறுகிய சாலையில் 4 கீ மீ வந்தால் இத்தலத்தை அடையலாம். மாயூரத்திலிருந்து நீடூர் சென்று அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம்.