Category Archives: பைரவர்

அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை

அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காலபைரவர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கல்லுக்குறிக்கை
மாவட்டம் கிருஷ்ணகிரி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பழம்பெருமை மிக்க இந்த காலபைரவரை கம்மம் பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல்பட்டி, நெல்லூர், கொல்லப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர்.

சனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணித் தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன.

அருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம்

அருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் மாவட்டம்.

காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ காலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீ காலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர் அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.

பைரவர் என்பவர், சிவனின் அம்சம். சேத்திரங்களை இவர் காப்பதால் சேத்திரபாலகர் என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு வேதங்களே நாய் வடிவில் பைரவருக்குக் காவலாக இருக்கின்றன. 64 வேறுபட்ட வடிவங்களில் பைரவர் திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள். பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கம். பொன்னும், பொருளும் மன அமைதியும், மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால் கிடைக்கக் கூடிய சில செல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான கொங்கணர், பைரவரை வழிபட்டு அட்டமாசித்திகளை அடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல், எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத் தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்து விளங்கியதற்கு பைரவரின் அருளே பிரதான காரணம்.