அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில்

அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் – 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 246 7017, 94435 – 97388 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநறையூர் நம்பி
உற்சவர் இடர்கடுத்த திருவாளன்
தாயார் வஞ்சுளவல்லி
தல விருட்சம் வகுளம்(மகிழம்)
தீர்த்தம் மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
ஆகமம் வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர் நாச்சியார்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவிஎனப்பெயரிட்டு வளர்த்து வந்தார்.

திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷோத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார்.

அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியைப் பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், “தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், “நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில்என்ற பெயரும் பெற்றது.

நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனம் கலங்கிய அவர், இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம்செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது.

தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை, “நம்பிஎன்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பதுபோல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு கருடாழ்வார் தனிச்சன்னதியில் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற்சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம்பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள், தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட்சோழன். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை மணிமாடக்கோயில்என்று பாடியுள்ளார்.

பஞ்சகிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம், முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது. இங்குள்ள மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது.

பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்க, அருகில் மேதாவி அவரை வணங்கியபடி உள்ளார். கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

பிரார்த்தனை:

வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்குத் துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

வழிகாட்டி:

கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் கோயில் இருக்கிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி

தங்கும் வசதி : கும்பகோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *