அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்– 622 507 புதுக்கோட்டை மாவட்டம்

+91-4322 -221084, 99407 66340 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்தியமூர்த்தி
உற்சவர் அழகியமெய்யர்
தாயார் உஜ்ஜீவனதாயார்
தல விருட்சம் ஆல மரம்
தீர்த்தம் சத்ய புஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமய்யம்
ஊர் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

தல வரலாற்றினையே கருவறையில் சிற்பங்களாக வடித்திருக்கும் கோயில் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில். ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர். அது கண்டு அஞ்சி, பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.

பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாது ஐந்து தலை நாகமான ஆதிஷேசன் தன் வாயிலிருந்து விஷ சுவாலையைக் கக்கி அரக்கர்களை விரட்டி விடுகிறான். பெருமாளின் அனுமதியின்றி அவ்வாறு செய்ததற்காக பயந்து இருக்கையில், பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக வரலாறு. இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் அஞ்சி, தன் தலையைச் சுருக்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்தியமூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மற்றொரு கரத்தில் சங்குடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சத்தியமூர்த்திப் பெருமாள் பெயரால் இத்தலம் சத்ய சேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக்காரணமாகிய பெருமாள், திருமெய்யர் எனும் திருநாமத்துடன் மற்றொரு சன்னதியில் பாம்பணை மேல் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். இத்திருஉருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது. பெருமாளின் பங்கையக் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க, இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார். சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் மாமல்லபுரச் சிற்பங்கள் போல் மலையை குடைந்து பாறைகளில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் தெய்வீக உணர்வையும் கலையுணர்வையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. 7ம் நூற்றாண்டு குடவரைக்கோயில். சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் இருக்கின்றன. இருகோயில்களும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். 12 வருடங்களுக்கு ஒருமுறை தைலக் காப்பு மூலவர் பெருமாளுக்கு பூசப்படுகிறது.

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டோமே.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

வைகாசி பௌர்ணமி தேர் – 10 நாட்கள்.

ஆடிப்பூரத் திருவிழா – 10 நாள்.

கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை லட்சக்கணக்கில் இருப்பது சிறப்பு. தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

வேண்டுகோள்:

குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது. உஜ்ஜீவனத்தாயாரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெறலாம். மேலும் மனநிலை சரியில்லாதவர்கள், பேய், பிசாசு பிடித்தவர்கள் நரம்பு தளர்ச்சி, நோயில் துன்புறுபவர்கள் பலர் இத்தாயாரை வழிபட்டால் தங்கள் பிரச்சினைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

தாயாருக்குத் திருமஞ்சனம், புடவை சாத்துதல், வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள். பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், சுவாமிக்குத் தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய், சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்குப் பூஜை செய்து பக்தர்களுக்கும் கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

திருச்சியிலிருந்து 72 கி.மீ.

புதுக்கோட்டையிலிருந்து 22 கி.மீ.

மதுரையிலிருந்து 84 கி.மீ.

தங்கும் வசதி :  குடும்பத்தோடு வருபவர்கள் புதுக்கோட்டை நகரில் தங்கி, கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

வழிகாட்டி:

மதுரை & புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து திருமயம் உள்ளது. எனவே.மதுரை,

புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம் திருமயம் (திருச்சி&ராமேஸ்வரம் இருப்பு பாதை).

அருகிலுள்ள விமான நிலையம்:  திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *