அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்

அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-266 542 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெய்வநாயகப்பெருமாள்
உற்சவர் மாதவப்பெருமாள்
தாயார் கடல் மகள் நாச்சியார்
தீர்த்தம் சோபன, தேவசபா புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீழச்சாலை
ஊர் திருத்தேவனார்த்தொகை, (திருநாங்கூர்)
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

துர்வாச முனிவர், வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், “பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும்என்று சாபம் கொடுத்தார்.

அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், “இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்ககூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்என கூறிச் சென்று விட்டார்.

கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ,”நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார்எனக் கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, “இது பெருமாள் காரியம். என்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடுஎன்றார்.

பெருமாள், “இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய்எனக் கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியைப் பலவாறாகத் துதித்தான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திருமகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காணத் தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த்தொகைஎனப் பெயர் ஏற்பட்டது.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மேற்கு பார்த்த பெருமாள் என்பதால் மிகவும் விசேஷம். பெருமாளின் திருமணம் நடந்த ஊராதலால் விமானத்தின் பெயர் சோபன (மங்கள) விமானம் என்று பெயர். கர்ப்பகிரகத்தின் முன்பு விசாலமான மண்டபம் இருக்கிறது. கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வசிஷ்டர் தரிசனம் செய்துள்ளார்.

கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

போதலர்ந்த பொழில் சோலைப் புறமெங்கும் பொறு திறைகள் தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணி தென்கரைமேல் மாதவன் தானுறையுமிடம் வயல் நாங்கை வரிவண்டு தேதென வென்றிசை பாடும் திருத்தேவனார்த் தொகையே

திருமங்கையாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை:

திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்து பெருமாளை ஒரு முறை தரிசித்து, தாயரையும் பிரார்த்னை செய்தால் பலன் நிச்சயம் என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

வழிகாட்டி:

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் திருநாங்கூர் உள்ளது. சீர்காழியிலிருந்து பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : மயிலாடுதுறை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *