அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா

அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்,(திருவெக்கா), காஞ்சிபுரம் -631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.

+91-44 -37209752 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
தாயார் கோமளவல்லி தாயார்
தீர்த்தம் பொய்கை புஷ்கரிணி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவெக்கா
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

பன்னிரு ஆழ்வார்களில் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார். இவர் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்து வளர்த்தார். ஆனால், ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி, எடுத்து வந்து குடிக்க கொடுத்தார். இதைத்தான் ஆழ்வார் முதன் முதலாக குடித்தார். தொடர்ந்து இவர்கள் கொடுத்த பாலை குடித்து வளர்ந்த ஆழ்வார், ஒருநாள் சிறிது பாலை மீதம் வைத்து விட்டார். அந்த பாலை வேளாளர் தன் மனைவியுடன் சாப்பிட்டார். உடனே தன் முதுமை போய் இளமை வரப்பெற்றார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கனிகண்ணன் என்று பெயரிட்டனர். ஆழ்வாருடனேயே வளர்ந்து வந்த கனிகண்ணன் பிற்காலத்தில் அவரது சீடரானார். பல சமயங்களிலும் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்தார். பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்க செய்ததுடன், அவருக்கு திருமந்திர உபதேசமும் செய்தார். ஒரு முறை காஞ்சிபுரம் வந்த திருமழிசை ஆழ்வார் திருவெக்கா தலத்திற்கு வந்து, பெருமாளுக்குப் பல ஆண்டுகள் சேவை செய்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டிக்கு அவர் விருப்பப்படி இளமையை திரும்ப வரும்படி செய்தார். இவளது அழகில் மயங்கிய பல்லவ மன்னன், அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான். காலம் சென்றது. மன்னன் வயதில் முதியவனானான். ஆனால் அவளது மனைவியோ என்றும் இளமையுடன் இருந்தாள். இதனால் கவலைப்பட்ட மன்னன் தனக்கும் இளமை வேண்டும் என விரும்பினான். எனவே ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனிடம் தனக்கும் இளமையாகும் வரம் வேண்டும் என வேண்டினான். எல்லோருக்கும் அந்த வரம் தர முடியாது என கனிகண்ணன் கூற, கோபமடைந்த மன்னன் அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார், சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார். இந்த பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை. எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என்று கூறினார். பெருமாளும் தன் பாம்பு படுக்கையை சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் தான் இந்த பெருமாளுக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள்என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார். இங்குள்ள பொய்கையாற்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார். எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயனத் திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார். சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக மாறி விரைந்தோடி வரும்போது, அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாக கூறுவர். வேகவதி ஆறே வெக்காஎன அழைக்கப்படுகிறது.

இத்தலப் பெருமாள் மேற்கு பார்த்த கோலத்தில் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார். இத்தலத்துள்ள பெருமாளை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், கனிகண்ணன், பிரம்மா, சரஸ்வதி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இங்கு இராமர், சீதை, இலட்சுமணன், அனுமன் ஆகியோர் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இத்தல மூலவரின் விமானம் வேதசார விமானம் எனப்படும்.

பாடியவர்கள்:

பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாஸனம்

இசைந்த வரவமும் வெற்புங் கடலும் பசைந்தாங் கமுது படுப்பஅசைந்து கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு

பேயாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை

ஆழ்வார் கூறியதை கேட்ட இத்தலப் பெருமாள், நமது குறைகளையும் கேட்டு நிறைவேற்றுவார்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.

வழிகாட்டி:

காஞ்சிபுரம் நகரில் ஆடிசன் பேட்டையிலிருந்து வரதராஜ பெருமாள் கோயில் செல்லும் வழியில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : காஞ்சிபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *