அருள்மிகு புன்னை ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், வனதிருப்பதி, புன்னை நகர்

அருள்மிகு புன்னை ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், வனதிருப்பதி, புன்னை நகர்– 628 618, குரும்பூர்நாசரேத் வழி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.

+91- 4639- 278 055, 279 077, 94443 96993, 93829 06220 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஸ்ரீனிவாசப்பெருமாள்
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள்
தாயார் பத்மாவதி தாயார், ஆண்டாள்
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் சரவணப்பொய்கை
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புன்னையடி
ஊர் புன்னை நகர்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இத்தலம் முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதி. இது, பசுக்கள் மேயும் தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் புன்னையடிஎன வழங்கப்பட்டது.


பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னைமரம் தான். அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தான் தரிசனம் தருவார். எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

இத்தலம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இங்குள்ள ஆதிநாராயணர் கோயில் மிகவும் பழமையானது. அதையும் தற்போது புதுப்பித்து பெரிய கோயிலாக கட்டியுள்ளனர்.
கடலில் பாதி கடம்பா என்பார்கள். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசிப்பகுதியில், ஆற்றின் கரையில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.

ராஜகோபுரம் அடுத்து உற்சவ மண்டபம், பிரகார மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகம் என 23000 சதுர அடி பரப்பளவில் மயனின் சாஸ்திரப்படி 22 மாதத்தில் கட்டப்பட்ட கோயில் இது.

கோயிலில் நுழைந்தவுடன் முழுமுதற்கடவுள் ராஜ கணபதி நமக்கு முதன் முதலில் தரிசனம் தருகிறார். கோயில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்துவதற்காக உற்சவமண்டபம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் எனப்படும் அஷ்டலட்சுமி மண்டபத்தில் நுழையும் போது சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் திருப்பதி கோயிலில் அருளுவதை போல அருள்பாலிக்கிறார். இவரைப்பார்த்தவுடன் திருப்பதி பெருமாளை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அர்த்தமண்டபத்தில் அருளுகின்றனர். பின் பெருமாளின் பத்து அவதாரங்களும் அருமையாக வடிக்கப்பட்டுள்ளது. கன்னி மூலையில் தாயார் பத்மாவதி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

அடுத்து வடபழநி முருகன், கிருபானந்த வாரியார் தனி சன்னதியிலும், ராஜகோபாலர் தனி சன்னதியிலும், வள்ளி தெய்வானையுடன் தணிகை முருகன் தனி சன்னதியிலும் அருளுகின்றனர். வாயு மூலையில் ஆண்டாள் உள்ளார். சீனிவாசப் பெருமாள் மூலஸ்தானத்தின் வெளிப்பிரகாத்தில் தெற்கு நோக்கி கணபதி, தட்சிணாமூர்த்தி, பின் பக்கம் குருவாயூரப்பன், வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஈசான்யத்தில் ஆஞ்சநேயரும் அருள்கின்றனர். மகாமண்டபத்தில் பெருமாளை பார்த்து வணங்கிபடி கருடாழ்வார் நிற்கிறார்.

அடுத்துள்ள ஆதி நாராயணர், சிவனணைந்த பெருமாள் திருக்கோயிலில் மூலவராக ஆதி நாரயணர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரைப்பார்த்த உடனேயே கடவுள் நேரில் நிற்பதை போன்று தோன்றும். ஆதிநாராயணருக்கு வலது பக்கம் பெரிய பலவேசம், சின்ன பலவேசம் தனி சன்னதியிலும், வடக்கு நோக்கி சிவனணைந்த பெருமாள், தெற்கு நோக்கி சிவகாமி, பிரம்ம சக்தி, பேச்சி ஆகியோர் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர்.
கோயில் பிரகாரத்தில் பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி, முத்து பிள்ளையம்மன், இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராம தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

மூலவருக்கு வெள்ளிக்கிழமைகளிலும், உற்சவருக்கு புதன் கிழமைகளிலும் வாரம் தோறும் திருமஞ்சனம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்குவதாக ஐதீகம். வியாழன் தோறும் இத்தல பெருமாளின் ஏகாதந்த சேவை நடக்கிறது. இந்த தரிசனம் பார்த்தால் சனி மற்றம் பிற கிரக தோஷங்கள் நீங்குவதாக கூறப்படுகிறது. பெருமாள் தங்களை ஈர்த்து அருள்பாலிப்பதாக இத்தலம் வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் இக்கோயிலுக்கு சொந்தமான நாக கன்னியம்மன் கோயில் உள்ளது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு வேண்டினால் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடக்கிறது. ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் இந்த அம்மன் கோயில் விளங்குகிறது.
வாத முடக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இங்குள்ள வாதமுடக்கி மரத்தின் அருகே தீபமேற்றி அம்மனை வழிபட்டால் விரைவில் குணமாவதாக நம்பிக்கை.

பெருமாளுக்கும் சிவனுக்கும் தனித்தனி ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. ஆகம விதிமுறைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. வடநாட்டு கோயில் பாணியிலும், சேர, சோழ, பாண்டியர்களது கால கோயில் பாணியிலும் கட்டப்பட்டது. இத்தலத்தின் அருகில் பெருமாளில் 108 திவ்ய தேசங்களில் நவதிருப்பதி எனப்படும் 9 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதி தரிசனம் செய்ய வருபவர்கள் இத்தலத்தினையும் தரிசனம் செய்வது சிறப்பு. அத்துடன் முருகனின் அறுபடை வீட்டில் கடற்கரை தலமான திருச்செந்தூர் மிக அருகில் அமைந்துள்ளது.

தினமும் 5 கால பூஜை சிறப்பாக நடக்கிறது. தினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு அவரிடம் ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் மறுநாள் பரிவேட்டை, புரட்டாசி சனி, கார்த்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.

வேண்டுகோள்:

கருணைக்கடலான பெருமாளிடம் எது வேண்டினாலும் கிடைக்கும். அப்படி ஒரு வரப்பிரசாதி இவர்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *