அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்

அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்-609 307, நாகப்பட்டினம் மாவட்டம்,

+04364 -289888 (மாற்றங்களுக்குட்பட்டது)

சீதையை மீட்க இலங்கைக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீராமபிரான் தனது பரிவாரங்களுடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர்கள் வரும் வழியில் இருந்த பாரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர்,” நடந்து முடிந்துவிட்ட யுத்தத்தில் பல அரக்கர்கள் மடிந்துவிட்டாலும், இன்னமும் சில அரக்கர்கள் தப்பி வந்து கடலுக்கு அடியில் அமர்ந்து கொண்டு, மேலும் அரிய சக்தியைப் பெற தவம் செய்தவாறு உள்ளனர். அவர்கள் மீண்டும் சக்தியைப் பெற்றுவிட்டால் அவர்களை அடக்க முடியாமல் போய்விடும். ஆகவே, அவர்கள் தவ வலிமை பெறு முன் அவர்களை அழித்து விட வேண்டும்என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

ஆனால் இராமபிரானோ, அந்த நேரத்தில் முக்கியமானது பரதனுக்கு வாக்கு கொடுத்ததே எனவும் அந்த வாக்கின்படி யுத்தம் முடிந்த கையோடு அயோத்திக்கே முதலில் சென்று அரசை ஏற்கின்றேன் என்று தான் கொடுத்த வாக்கை மீறுவது குற்றம் என்பதினால் அந்த அரக்கர்களை அழிக்க தான் வேறு உபாயம் செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின் அனைவருடனும் ஆலோசனை செய்தப் பின் அந்த அரக்கர்களை அழிக்க ஹனுமாரை அனுப்புவது எனவும் முடிவு செய்தனர்.
ஏற்கனவே செய்து இருந்த தவத்தினால் பல வலிமைகளை பெற்று இருந்தவர்களை அழிப்பது சுலபம் அல்ல என்பதினால் அனைத்து தெய்வங்களின் சக்தியை ஒன்று திரட்டி அவர்களை அழிக்க வேண்டும் என்பதினால் பிரும்மா பிரும்ம கபாலத்தையும், உருத்திரர் மழுவையும், இராமர் தனது வில் அம்புகளையும், விஷ்ணு சங்கு மற்றும் சக்கரத்தையும், இந்திரன் வஜ்ராயுதம் போன்றவற்றையும் அளிக்க முடிவெடுத்தபோது அங்கு வந்த சிவ பெருமான் தனது மூன்றாவது கண்ணையே அவருக்குக் கொடுத்தார். வானேறிச் செல்ல அங்கு இருந்த கருடாழ்வாரோ தனது சிறகுகளையே ஹனுமாருக்குக் கொடுக்க விண்ணிலே பறந்து சென்ற ஹனுமார் கடலில் முழுகி அங்கு இருந்த அரக்கர்களை வெளியே இழுத்து வந்து அவர்களுடன் யுத்தம் செய்து அழித்தார். நவகிரகங்களும் அவருக்கு துணை புரிந்தனராம். அந்த யுத்தம் முடிந்ததும் கடலில் குளித்துவிட்டு மீண்டும் இராமபிரானை காண ஆனந்தத்துடன் வந்து அருகில் இருந்த வனப் பிரதேசத்தில் தங்கி சற்று நேரம் கண் அயர்ந்தார். அந்த இடமே ஆனந்த மங்கலமாயிற்று.

அவர் கண் அயர்ந்த இடத்தில், சோழர்கள் காலத்தில் ஒரு ஆலயம் எழுந்தது. அது ஆழ்வார்கள் காலத்துக்கு பின்னர் தோன்றியதாம். சோழர்கள் காலத்தில் அந்த மூலவர் ஆலயத்தின் எதிரிலேயே இன்னொரு ஆலயம் அமைக்கப்பட்டது. அதில் மூலவராக வாசுதேவப் பெருமான் தனது தேவிகளுடன் அற்புதமாகக் காட்சி தந்து கொண்டு இருக்கின்றார். அருகில் உள்ள கருவறையில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, தனது தேவிவிகளான உருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் காட்சி தருகிறார். அதே ஆலயத்தில் த்ரினேத்ர தசபுஜ ஆஞ்சநேயர் எனும் பத்து கைகளைக் கொண்ட ஹனுமானும் தெற்கு நோக்கி பார்த்தவாறு எழுந்து அருளி உள்ளார். அவரை முதல் ஆலயத்தின் உற்சவ மூர்த்தி என்கிறார்கள். அங்குள்ள ஹனுமார் தனது பத்து கைகளிலும் அனைத்து கடவுட்களும் கொடுத்த ஆயுதங்களுடனும் கருடாழ்வார் தந்த சிறகுடனும் காட்சி தருகிறார். ஆலயத்தில் பூதேவியார் மற்றும் கருடாழ்வாருக்கும் சன்னதிகள் உள்ளன.

அனந்தமங்கலத்துக்கு செல்பவர்கள் முதலில் மூலவர் ஆலயத்தில் உள்ள த்ரினேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு, அதன் எதிரில் அமைந்து உள்ள ஸ்ரீ ராஜகோபாலப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துள்ள த்ரினேத்ர தசபுஜ ஆஞ்சநேயரையும் சென்று வணங்க வேண்டும். அமாவாசைகளில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் சாற்றி விசேஷ பூஜைகள் செய்கிறார்கள். இந்த ஆலயங்களில் வந்து ஹனுமானை வழிபட்டால், அவருக்கு ஆயுதங்களையும் தனது கண்ணையும் தந்த சிவன், விஷ்ணு, பிரும்மா, இராமர், இந்திரன், உருத்திரன், கருடாழ்வார் போன்ற அனைவரையும் ஒரு சேர வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும் உடல் வலிமை, நீண்ட ஆயுள், எதிரிகள் நாசம், நோய் நொடிகள் விலகி மனத் தெளிவு ஏற்படுவது திண்ணம் என்கிறார்கள். முக்கியமாக மூல நட்ஷத்திரத்துடன் வரும் அம்மாவாசையில் அல்லது கேட்டை நட்சத்திர காலத்திலும் இங்கு வந்து அவருக்கு துளசி இலை மாலை, அல்லது வடை மாலை சாற்றி வழிபட்டால் அனைத்து தீமைகளும் விலகுமாம். அதற்கும் மேலாக அவர் வாலில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளன எனவும் நவகிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடுவது சிறந்ததாம்.

மூலவர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி பார்த்தபடி நின்று கொண்டு உள்ளார். மேலும் அந்த ஆலயத்தில் சுவற்றோடு ஒட்டி உள்ள குகை போன்ற பகுதியில் ஒரு பாறையில் காணப்படும் சிலை சுயம்புவாகத் தோன்றியது என்கிறார்கள். அந்த ஆஞ்சநேயருக்கு மூன்று கண்கள் மற்றும் நான்கு கைகளே தெரிகின்றன. அந்த ஆலயத்தில் ஒரே ஒரு பிராகாரம் மட்டுமே உள்ளது. அதற்குள் உள்ள குகைப் பகுதியில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *