அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி

அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர் மாவட்டம். ஆந்திரா மாநிலம்.

காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமிநாராயணர்
தாயார் மகாலட்சுமி
தல விருட்சம் பாரிஜாதம்
தீர்த்தம் தசாவதார தீர்த்தக்குளம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேம்பஞ்சம்ஹரி
ஊர் வேப்பஞ்சேரி
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்திரம்

ஆந்திர மாநிலத்தில் 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்த காலத்தில் இக்கோயில் அமையப்பெற்றது. பின்னர், அடுத்தடுத்து நடந்த படையெடுப்பு காரணமாக கோயிலின் பெருமை குறைந்தது. பசு வளர்ப்பு, விவசாயம் இக்கிராமத்து மக்களின் முக்கிய தொழில். மழை பொய்த்ததால் விவசாயம் பாதித்தது; கால்நடைகள் தீவனம் இன்றி தவித்தன; பசி, பட்டினியால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இவைகளுக்கு காரணம் தெரியாமல் மக்கள் தவித்தனர். நாளடைவில் விடைதேடிய கிராம மக்கள் ஒன்று கூடினர்; விவாதித்தனர். வேப்பஞ்சேரியின் காக்கும் கடவுளான லட்சுமி நாராயணனுக்கு கடந்த காலங்களில் பூஜை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தனர். அப்போது, அசரீரியாக ஒலித்த குரல், “எனக்கு முன் போல் நித்ய பூஜைகளும், அபிஷேகங்களும், குறைவில்லாமல் செய்து வந்தால், என்னுடைய அருளால் இக்கிராமம் செழிக்கும், குலம் விளங்கும், மாடு, கன்று, பயிர்கள் செழிக்கும்; உங்களின் பாவங்களிலில் இருந்து விடுதலையும் கிடைக்கும்என்று கூறியது. இதைத் தொடர்ந்து இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, நித்ய பூஜைகளும், பிரம்மோற்சவம் முதலான விழாக்களும் நடந்து வருகின்றன.

கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரபாலகரையும் வழிபடலாம். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார். சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது.

ஆழ்வார்களுக்கும் இக்கோயிலில் இடம் உண்டு. கோயிலுக்கு தசாவதார தீர்த்தக்குளமும் உண்டு. குளத்து நீர் இனிப்பு சுவையுடன் உள்ளது. பாவங்களை போக்கி பரிகாரம் செய்ய பயன்தருகிறது. இக்குளத்தை சுற்றி அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, தசவதார சிலைகள் தனித்தனியே அமைத்துள்ளனர். குளத்தின் நடுவே நீரில் காளிங்க நர்த்தனம் புரிபவராக கிருஷ்ணர் அமைந்துள்ள காட்சியை காண கண்கள் கோடி வேண்டும். குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலையை தரிசிக்காமல் வரமுடியாது.

இலட்சுமிதேவியை தன் மடி மீது அமர வைத்து, சாந்தமாக காட்சி தருகிறார் இலட்சுமி நாராயணன்.

திருவிழா:

கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை:

திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சனை தீர, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர், தொழில் பாதிப்படைந்தோர் இக்கோயிலுக்கு வந்து முறையாக பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். இலட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

வழிகாட்டி:

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது வேப்பஞ்சேரி கிராமம். சித்தூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலும், திருப்பதியிலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்திலும், வேலூரிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்திலும் வேப்பஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பதி

அருகிலுள்ள விமான நிலையம் : திருப்பதி

தங்கும் வசதி : சித்தூரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி அங்கிருந்து கோயிலுக்கு செல்லலாம்.

2 Responses to அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி

  1. க.தென்னரசன் says:

    என்னுடைய நண்பர் ஒருவர் வேப்பஞ்சேரி பெருமாள் கோயிலுக்கு செல்ல வழி கேட்டார். அதுவரை நான் இந்தக் கோயிலைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை. இணையத்தில் தேடியபோது இந்த வலைப்பூவைப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி

  2. மிக நன்றி தென்னரசு அவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *