அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில், சன்னியாசி கிராமம்

அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில், சன்னியாசி கிராமம்திருநெல்வேலி மாவட்டம் .

+91- 462 – 233 4624 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண சீனிவாசர்
உற்சவர்
தாயார் அலமேலு தாயார்
தல விருட்சம்
தீர்த்தம் கோபால, சீனிவாச தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வித்யகோபாலபுரம்
ஊர் சன்னியாசி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணன், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூவுலகிற்கு வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கினார். தாமிரபரணியில் குடிகொண்ட அவரை அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் என அனைவரும் அவரைத் துதித்து வணங்கி வந்தனர். அவர்களில், சன்னியாசி என்று ஒருவர் இருந்தார். அவருக்கு, சுவாமியின் மனிதரூப காலம் முடிந்து விட்டால், மனித குலம் நற்பயன்கள் பெறமுடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் எற்பட்டது. எனவே, நாராயணனை நோக்கித் தவம் புரிந்தார். அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த நாராயணர், அருட்காட்சி தந்தார். அவ்விடத்திலேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாகக் கூறி அருளினார். இவ்வாறு, சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர் இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த இடத்துக்கும் சன்னியாசி கிராமம் என்ற பெயர் ஏற்பட்டது.

திருப்பதிக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையை செலுத்துகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் பெருமாளை வழிபட்டால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் தீபாவளிப் பண்டிகையின் போது கல்யாண சீனிவாசருக்கு ஒரு மண்டலம் அலங்காரம் செய்து உற்சவம் நடப்பது சிறப்பு.

இத்தலத்தில் அருள்புரியும் வெங்கடாஜலபதி திருப்பதியில் இருப்பதைப்போலவே தோற்றம் கொண்டுள்ளார். இதனால் இத்தலம் தென்திருப்பதிஎன்ற சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. சுவாமி தனது வலது மார்பில் ஸ்ரீதேவி, இடது மார்பில் பூதேவி ஆகியோரைத் தாங்கியபடி, கையில் சங்கு, சக்கரம் கொண்டு, இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகள் அணிந்து, திருப்பாதத்தில் தண்டை, கொலுசு அணிந்த அற்புத கோலத்தில் அருட்காட்சி தருகிறார். அர்த்தமண்டபத்தில் அலமேலு தாயார் தனியே நின்றிருந்தும், அவருக்கு இடப்புறம் கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி ஆசி வழங்கிய கோலத்தில் வராகம், கருடன், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய திருமுகங்களுடன் தனது முகம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரும் பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றனர். ஒரே நேரத்தில் வெங்கடாஜலபதி, அலமேலு தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய மூவரையும் தரிசனம் செய்வது போல கோயில் அமைந்துள்ளது. சுவாமிக்கு பின்பு வலப்புறம் லட்சுமி, இடப்புறம் ஆண்டாள் ஆகியோர் மதிற்சுவரில் இருந்து அருள்புரிகின்றனர்.

மூலவர் சன்னதியில் மேல் உள்ள விமானம் ஆனந்த விமானம் எனப்படுகிறது.

திருவிழா:

தமிழ் புத்தாண்டு, ஆனிப்பூரம், தீபாவளி, நவராத்திரி, புரட்டாசி பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ராப்பத்து உற்சவம்.

வேண்டுகோள்:

இத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை வேண்டினால் படிப்புத் தடை விலகும், திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு, நல்லவேலை கிட்டும், எண்ணிய காரியங்கள் நிறைவேறிடும்.

ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வர, வழக்குகளில் வெற்றி கிட்டும், வியாதிகள் தீரும் என நம்பப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வெங்கடாஜலபதிக்கு புஷ்ப அங்கி, வஸ்திரங்கள் சாத்தி, நைவேத்யம் படைத்து, ஊஞ்சல் துலாபாரம் செய்து, முடிகாணிக்கை செலுத்தப்படுகிறது. பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகள் சாத்தப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *