அருள்மிகு வன துர்க்கை கோயில், கதிராமங்கலம்

அருள்மிகு வன துர்க்கை கோயில், கதிராமங்கலம், தஞ்சை மாவட்டம்

04364 232555 / 232999, 094422 11122, 094432 61999, 094867 67735, 094430 71765(மாற்றங்களுக்குட்பட்டவை)

முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. அவன், அப்படி ஒரு வரத்தைப் பெற்று இருந்தான். அவனுடன் சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களும் இருந்தார்கள். அந்த அசுரர்கள் அனைவரும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த அசுரர்களின் கொடுமைகள் தாங்க முடியாமல் போன தேவர்கள், பிரும்மாவுடன் சேர்ந்து திருமாலை சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் யோகநித்திரையில் இருந்தார். அங்கு தேவர்களுடன் சென்ற பிரும்மா, மகிஷாசுரனினால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை விளக்கமாக எடுத்துக் கூற, அதைக் கேட்ட திருமால் வந்தவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சிவனிடம் சென்றார். சிவபெருமானும் கோபமுற்றனர். திருமால், சிவன் ஆகியோரின் உடம்பில் இருந்து வெளிவந்த கோபக் கனல் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஒளியை தோற்றுவித்தது. சிறிது நேரத்தில் அந்த ஒளியில் இருந்து, பல ஆயுதங்களையும் கையில் ஏந்திய சாந்தமான முகத்தைக் கொண்ட ஒரு பெண் வெளியே வந்தாள். வெளிவந்தவள்,”நான்தான் காத்தாயி எனும் துர்க்கை. நான் அனைத்து கடவுள்களையும் படைத்த பரப்பிரும்மத்தின் உருவம். நான் எவராலும் படைக்கப்படவில்லை. நான், அனைவரது சக்தியினாலேயே தன்ன்னாலே இயற்கையாக உருவானவள். எனவே, நான் இந்த பூமியில் பிறந்தவர்களால் அழிக்க முடியாத அந்த மகிஷாசுரனை அழிக்க இயற்கையாகத் தோன்றி வந்துள்ளேன்என்றாள். தேவர்கள் மகிழ்ந்தனர். எல்லோரும் தங்களிடமிருந்த ஆயுதங்களை அவளிடம் கொடுத்து அந்த அசுரனை அழிக்க வேண்டினார்கள். அவளும் அரக்கர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவர்களை அழிக்க கிளம்பினாள்.

ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். மலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்தாள். அவளைக் கண்ட அசுரர்கள் அவள் அழகில் மயங்கி, அவளை அடைய அவளைத் துரத்திக் கொண்டு சென்றபோது, அவள் தனது சக்தியினால் ஒரு பெரிய சேனையே உருவாக்கிக் கொண்டு அவர்களுடன் யுத்தம் செய்யத் துவங்கினாள். சண்டை ஆரம்பித்தது. ஒன்பது தினங்கள் நடந்த சண்டையில் ஒன்பது அவதாரங்களை எடுத்து சண்டை போட்டாள். மகிஷாசுரன், ஒவ்வொரு நாளிலும், பல்வேறு உருவங்களில் மாறி மாறி வந்து சண்டையிட்டான். ஒன்பதாம் நாள் சிங்க உருவில் வந்த வந்த அவனைத் தனது வாளால் வெட்டிக் கொன்றாள்.

துன்பங்களை துடைக்க வந்தவள் என்பதால் துர்காஆயிற்று. மகிஷனை வதம் செய்த்தால் மகிஷாசுரமர்தினிஎன ஆயிற்று.

இன்னொரு கதையின்படி, துர்க்கை என்பவள் சிவபெருமானின் மனைவியான பார்வதியே எனவும் அவளே சிவனுடைய கோபக் கனலில் இருந்து தோன்றினாள் என்றும், மகிஷாசுரனை வதம் செய்யவே தோன்றினாள் என்றும் தெரிகின்றது. எது எப்படியோ, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி போன்றவர்கள் பார்வதியின் அவதாரங்களே என்பதே உண்மை.

அதன் பின் பல இடங்களிலும், அவள் கோபமான முகத்தையும் பல கைகளையும் கொண்டு, தனது காலடியில் மகிஷாசுரனின் உடல் மீது நின்ற நிலையில் மகிஷாசுரமர்த்தினியாகவும், மேலும் நவ துர்க்கை ரூபங்களிலும் காட்சி தந்து கொண்டு உள்ளாள். இந்த உருவங்களுக்கேற்று அவள் பெயர் மாறியது.

ஒரு கால கட்டத்தில், யுத்தத்தினால் சலிப்பு அடைந்தவள், சிறிது காலம் ஏகாந்தமாக இருக்க நினைத்து அந்தக் காலத்தில் சிவ மல்லிகை என்று அழைக்கப்பட்ட கதிராமங்கலத்தில் வந்து அங்கிருந்த ஒரு வனத்தில் தங்கினாள். அங்கு வந்தவள் தனது கோலத்தை மாற்றிக் கொண்டாள். சாந்தமான முகம், நான்கு கைகள், தான் கொன்ற அசுரன் மீது நின்ற காட்சி, மற்றும் யுத்தவெறி இல்லாத தோற்றம் போன்றவற்றைக் கொண்டு, அங்கு வனத்தில் அமர்ந்து கொண்டு இளைப்பாறி, சிவபெருமானுடன் மீண்டும் இணைய வேண்டும் எனத் தவம் செய்து வந்தாள். தினமும் ஆகாயமார்கமாக வாரணாசிக்குச் சென்று, அங்குள்ள கங்கையில் நீராடிவிட்டு இங்கு வந்து தவம் இருப்பாளாம். அனைவரது துயரங்களையும் தூளாக்கி இன்பத்தை தருபவள் என்ற அர்த்தத்தை தரும் துர்கா என்ற பெயரை ஏந்தி வனத்தில் வந்து அமர்ந்ததினால் வன துர்காவாக மாறினாள். அந்த வனத்தில் சிவ பூஜைக்காக தினமும் மலர்களை பறிக்க வந்து கொண்டு இருந்த ராகு பகவான், அங்கு வந்து தங்கியிருந்த வன துர்காவை அடையாளம் கண்டு கொண்டு, தினமும் அவளை இங்கேயே வந்து வணங்கி பூசிக்கலானார். அவர் வேண்டுகோளை ஏற்ற அவளும் அங்கேயே ஒரு சிலையாக அமர்ந்தாள். இப்படியாக அந்த வனத்தின் தோன்றியவளே வன துர்க்கை.

ஒரு கால கட்டத்தில் அங்கு கம்பர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் அந்த வனத்தில் இருந்த துர்காவின் சிலையை, ஒரு தேவதையின் சிலையாகக் கருதி பூசித்து வந்தார். ஒரு நாள் நல்ல மழை, காற்று. குடிசையே பறந்து விடும்போல இருந்தது. தன் வீட்டையும் காப்பற்றித் தன்னையும் காத்தருளுமாறு மனமுருகிக் கம்பர் அந்த வன தேவதையை வேண்டினார். என்ன ஆச்சர்யம் அவர் குடிசை மீது நெல் கதிரால் ஆன தடுப்பு தானாகவே தோன்றியது. அதைக் கண்ட கம்பர் அந்த தேவதையை நெல்லால் ஆன கதிரை தடுப்பாய் தந்தவள் என்ற அர்த்தத்தில் கதிர் தேவிஎன ஆராதித்தார். இப்படியாக அந்த இடத்தின் பெயர் கதிரால் ஆன இடம் என ஆகி அது மருவி கதிராமங்கலம் ஆயிற்று.

அடுத்து இன்னொரு காட்சி நடந்தது. அகத்திய முனிவரும் கதிராமங்கலம் வந்து தங்கி இருந்தார். அவரும் அந்த தேவியின் சிலையை யார் என்று அறியாமல் வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருமணத்தைக் காண இமயமலையை நோக்கிச் சென்றபோது வழியில் ஒரு அசுரன் அவரை தடுத்து நிறுத்தினான். அகத்தியரோ உருவத்தில் குள்ளர். பூதாகாரமான அந்த அசுரனை எப்படிச் சண்டையிட்டு சமாளித்து மேலே செல்வது? ஆகவே, வனத்துக்குத் திரும்பினார். அங்கு இருந்த அந்த தேவியின் சிலையை, மகிஷாசுரனைக் கொன்ற துர்கையாக பாவித்து மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டவள் அவருக்கு சக்தி தந்தாள். அந்த சக்தியைக் கொண்டு அகத்தியர் மீண்டும் இமயமலைக்கு கிளம்பிச் சென்றார். மீண்டும் அதே அசுரன் அவரை வழிமறிக்க, அவனை நொடிப்பொழுதில் அவர் துர்க்கை தந்த சக்தியால் வதம் செய்துவிட்டு மேலே தொடர்ந்து பயணம் செய்தார். அப்போதுதான் அவர் அங்குள்ள தேவதையின் சிலை பார்வதியின் அவதாரமான துர்க்கையே என்பதை புரிந்து கொண்டார். வனத்தில் இருந்து கொண்டு தனக்கு வாழ்வளித்த துர்க்கை என்ற பொருளில் பாடித் துதிக்க அவள் அங்கு வன துர்க்கை என்ற பெயரைப் பெற்றாள்.

மூன்றாவது சம்பவம்:

மிருகண்டு முனிவர் தனது மகன் மார்க்கண்டேயனின் மரணம் நிகழ இருந்த சமயத்தில் அங்கு வந்தார். அங்கு பார்வதி தேவி துர்கையின் உருவில் சிவனை நோக்கி தவத்தில் இருந்த காட்சியைக் கண்டார். தனது மகனின் உயிரை காப்பாற்றுமாறு அவளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டார். அவளோ அவரை திருக்கடையூருக்குச் சென்று, அங்குள்ள சிவனை வேண்டிக் கொண்டால் அவர் மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்றுவார் எனக் கூற அவரும் திருக்கடையூருக்குச் சென்று சிவனை பிராத்திக்க மார்கண்டேயர் உயிர் பிழைத்த தனிக் கதை பிறந்தது.

அதனால்தான் திருக்கடையூருக்கு செல்பவர்கள் மறக்காமல் இந்த வன துர்க்கை ஆலயத்துக்கும் செல்லவேண்டும். அப்பொழுதுதான் பூரண அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

காலம் ஓடியது. அங்கிருந்த மக்கள் ஒரு கீற்றுக் கொட்டகைப் போட்டு, அந்த வன துர்கையைப் பிரதிட்டை செய்து போற்றி வணங்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல சாமியாடிகள் மூலமும் அசரீரி வாக்கு மூலமும் அந்த ஆலயத்தில் உள்ள தேவியின் மகிமைகள் வெளியில் தெரியத் துவங்கின.

அந்த ஆலயத்தில் உள்ள சிலை சுயம்புவாகத் தோன்றியது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு அந்த ஆலயம் எழுந்துள்ளது. அந்த காலங்களில் ஆலயம் என்றால் கட்டிடம் அல்ல. எந்த இடத்தில் எந்தக் கடவுள் பூசிக்கப்பட்டாரோ அந்த இடத்தை ஆலாயம் என்றார்கள். வேத காலத்தில் அந்த இடத்தின் பெயர் சிவ மல்லிகை வனம் என்றே கூறப்பட்டு வந்தது.

அந்த ஆலயத்தில், ராகு பகவான் வந்து அவளை பூசிப்பதினால், ராகு தோஷம் உள்ளவர்கள் வன துர்கையின் ஆலயத்துக்கு வந்து பூசிக்கிறார்கள். அங்கே வந்து அவளை பூசிக்கும் ராகு தேவர், அந்த பக்தர்களின் தோஷங்களை களைவார் என்ற நம்பிக்கை தோன்றியது. அதற்கு ஆதாரமாகவோ என்னவோ, அந்த தேவி சிலையின் முன்புறப் பகுதியில் சாந்த முகம் கொண்ட அம்பாளின் தோற்றமும், பின்புறப் பகுதி, படமெடுத்து நிற்கும் நாகத்தின் உருவாகவும் அமைந்து உள்ளது. அந்த அழகை, அந்த ஆலயத்தில் தேவியின் சிலைக்கு மேல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி மூலம் காணலாம்.

அங்குள்ள வன துர்க்கை, அற்புதமான சாந்த முகத்தோடு ஒரு தாமரை மலரில் நின்று கொண்டு தனது நான்கு கைகளில் இரண்டில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மூன்றாவதில் அபய முத்திரைக் காட்டியும், நான்காவதை தனது இடுப்பில் வைத்தவாறு கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இதுவும் இந்த வன துர்க்கை ஆலயத்தின் ஒரு தனிச் சிறப்பே. ஏனெனில், மற்ற அனைத்து ஆலயங்களில் அவள் வடக்கு அல்லது தெற்கு நோக்கியே காட்சி தருபவள். ஆகவேதான் ராகு பூசிக்கும் நேரமான ராகு காலத்தின் போது, அங்கு வந்து எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கு ஏற்றித் துர்கையை வழிபட ராகு தோஷம் விலகும் என்ற ஐதீகம் தோன்றியது.

அனைத்து ஆலயங்களிலும் உள்ளதைப் போல இங்கு விநாயகரின் சன்னதி இல்லை. விநாயகரை வணங்கியப் பின்னரே ஆலயங்களில் உள்ள மற்ற மூர்த்திகளை வணங்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக இங்கு, அந்த துர்கையுடனே அவர் கலந்து இருப்பதான ஐதீகம் உள்ளதினால் அவருக்குத் தனி சன்னதி எழுப்பப்படவில்லை. ஆலயத்தின் மீது மேல் கூரையில் ஒரு பெரிய துவாரம் அமைந்து உள்ளது.

முன்னர் அந்த துர்க்கை தினமும் காசிக்குச் சென்று, அங்குள்ள கங்கையில் நீராடிவிட்டு, இங்கு வந்து தவம் இருந்து வந்ததால், இன்றும் தினமும் அவள் விடியற்காலை ஆகாயமார்கமாக வாரணாசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டு வருகிறாள் என்பதற்காகவே அந்த துவாரம் அமைக்கப்பட்டு உள்ளதாம். ஆலயத்தின் எதிரில் ஒரு தாமரைக் குளம் உள்ளது. அதில் வெள்ளைநிற மீன்களும், தாமரை மலர்களும் உள்ளன.

இந்த ஆலயத்தில் வந்து நெய்விளக்கேற்றி பூசிப்பதினால்:-
ஆயுள் பெருகும்
ராகு தோசம் விலகும்
செல்வம் கொழிக்கும்
எதிரிகள் நாசம் அடைவார்கள்
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்
மனம் அமைதி பெரும் மற்றும்
நோய் நொடி தீரும்.

எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால், அவர்களின் குல தெய்வத்திடம் அவரை வழிநடத்திச் செல்வாள் என்பது ஐதீகம்.

இது அங்குள்ள பண்டிதர் சொல்லியது.

திருக்கடையூருக்கு அறுபதாவது வயது திருமணம் செய்து கொள்ளப் போகின்றவர்கள், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மார்க்கண்டேயர் ஆலயம் மற்றும் அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி உள்ள இந்த வன துர்க்கை ஆலயமும் சென்றுவிட்டு திரும்பினால் மட்டுமே அந்த வைபவம் நிறைவு பெற்றதற்கான பூரண பலன் கிடைக்கும் என்று அங்குள்ள பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

வழிகாட்டி:

மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம்.

2 Responses to அருள்மிகு வன துர்க்கை கோயில், கதிராமங்கலம்

  1. துன்பங்களை துடைக்க வந்தவள் என்பதால் “துர்கா” ஆயிற்று.

    சக்திவாய்ந்த அம்மன் பற்றிய அருட்தகவல்களுக்கு நன்றி ஐயா.

  2. நன்றி அம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *