அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்– 609 503. திருவாரூர் மாவட்டம்.

+91-4366-238445,+04366- 239909, 9444635427, 9976215220 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சரஸ்வதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் கூத்தனூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,” என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால்தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார்.

இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி, பிரம்மனும் சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு, பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.

சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர்.

பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி,”இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாகக் கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குஎன்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள்.

தமிழகத்தில் சரஸ்வதிக்கென மிகப்பெரிய தனிக்கோயில் கூத்தனூர் மட்டுமே. பிரம்மாவுக்கு அதிகமாக கோயில்கள் அமையாததால் அவரது மனைவியான சரஸ்வதிக்கும் இந்தியாவில் அதிக கோயில்கள் அமையாதது இயற்கையே. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலும் பிரம்மாவுக்கு சிலை இல்லை.

இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் கூத்தனூர்ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோயிலைக் கட்டினார் என்று தலபுராணம் சொல்கிறது.

இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதன் காரணமாகவே அவர் புகழ் பெற்ற கவிஞராக முடிந்தது என்கிறார்கள். இக்கோயில் ஒற்றைப் பிரகாரத்தைக் கொண்டது. ராஜகோபுரம் இருக்கிறது. பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி உள்ளனர். ஒட்டக்கூத்தருக்கு சிலை இருக்கிறது. சரஸ்வதியின் முன்னால் அன்ன வாகனம் உள்ளது. இதில் நர்த்தன விநாயகர், சுயம்புமூர்த்தியாக இருக்கிறார்.

சரஸ்வதி சிலை அமைப்பு:

மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சரமாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள்.

ஜடாமுடியும், கருணைபுரியும் இருவிழிகளும், “ஞானச்சஸ்என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

இக்கோயிலின் அருகில் புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி கோயில் இருக்கிறது. இந்த தலத்து சிவனை வழிபட்டால், திருமணத்தடையுள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. கருவறையில், கல்யாணப்பந்தலே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலம்,”ஞான பீடம்என்றும் தெட்சிண திரிவேணி சங்கமம்என்றும் புகழ் பெற்றது.

இவ்வூர் சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனி கோயிலில் சரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர். ஒரே ஊரில் முப்பெரும் தேவியரையும் தரிசிக்க முடியும்.

இரண்டு நதிகள் இணைந்த ருத்ர கங்கைஇங்கு உள்ளது. இதே ஊரிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிசேக நீர் இத்தீர்த்தத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. தற்போது அரிசிலாறுஎன்ற பெயரில் ஓடுகிறது. பித்ரு தர்ப்பணத்திற்கு இந்நதி மிகச்சிறந்த நதியாகும். தற்போது இந்நதி பலநாட்கள் காய்ந்தே கிடக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் வருகிறது.

திருவிழா:

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி 12 நாட்களுக்கு பின் 10 நாள் ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்குரிய பவுர்ணமி மூல நட்சத்திரத்தில் மாதம் தோறும் சிறப்பு பூஜைகளும், ஆண்டு தோறும் தமிழ் வருடப்பிறப்பிலிருந்து 45 நாட்களுக்கு லட்சார்ச்சனையும் நடக்கிறது.

விஜயதசமியன்று சரஸ்வதி, அன்ன வாகனத்தில் வீதியுலா செல்கிறாள். விஜயதசமியை அடுத்த மூன்றாம் நாளில் இருந்து 8 நாட்கள் ஊஞ்சல் உற்ஸவம் (அக்.24ல் துவங்குகிறது) நடக்கிறது. சரஸ்வதியின் வாகனமான அன்னப்பறவை சன்னதி எதிரே பீடத்திற்கு அருகில் இருக்கிறது. பிரம்மா, சரஸ்வதி இருவரும் வழிபட்ட சிவன் பிரம்மபுரீஸ்வராகமுன்மண்டபத்தில் இருக்கிறார். இந்த லிங்கம் தாமரை இதழ் வடிவ பீடத்தில் இருப்பது விசேஷம். இவருக்கு வலப்புறத்தில் பிரம்மா கைகூப்பி வணங்கியபடி நின்றிருக்கிறார். பிரகாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார்.

அட்சராப்பியாச நிகழ்ச்சி:

சரஸ்வதி இங்கு தவக் கோலத்தில் இருக்கிறாள். நவக்கிரகங்களில் புதன் கல்வி மற்றும் வாக்கிற்கு அதிபதி. ஆகவே, புதன்கிழமைகளில் சரஸ்வதியை வழிபடுவது விசேஷம். பவுர்ணமி மற்றும் மூல நட்சத்திரத்தன்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. விஜயதசமியன்று காலையில் இக்கோயிலில் அட்சராப்பியாசம்நிகழ்ச்சி நடக்கும். அன்று மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்து, சரஸ்வதியின் பாதத்தில் புத்தகம், பேனா போன்ற எழுது பொருட்களை வைத்து பூஜை செய்கின்றனர்.

ஒட்டக்கூத்தர் சிலை முன்பாக பலகையில் பரப்பியிருக்கும் நெல்லில், குழந்தைகள் மோதிர விரலால் ஓம்என்று எழுதி, அதன் மேலேயே ,எழுதுகின்றனர். பெற்றோர், குழந்தைகளை தங்கள் மடியில் மேற்கு பார்த்து அமர வைத்து, அவர்கள் கையைப் பிடித்து எழுத வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர் என்பது நம்பிக்கை. புதன்கிழமைகளிலும் அட்சராப்பியாசம் செய்து கொள்ளலாம்.

கல்வி பூஜை:

சரஸ்வதி பூஜை, விஜயதசமி தவிர பிற நாட்களில் சரஸ்வதிக்கு வெண்பட்டு சாத்தி, வெண்ணிற மலர் சூடி, தேன், பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதற்கு கல்வி பூஜைஎன பெயர். பிரகாரத்தில் எழுதுபலகை ஒன்று உள்ளது. மாணவர்கள் சரஸ்வதியிடம் வேண்டிக்கொண்டு, இப்பலகையில் தங்களது தேர்வு எண்களை எழுதுகிறார்கள். இதனால் நல்ல தரத்தேர்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். நெய் தீபமும் ஏற்றி வழிபடலாம்.

கல்விக்கடவுளான சரஸ்வதியை முறைப்படி, மனதார, வணங்குபவருக்கு தேன், பால், திராட்சை போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறும். அத்துடன் காவியங்கள் படைக்கும் புலவராகவும் திகழ்வார்.

அம்பாளுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.

கும்பகோணத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் வழியில் பேரளம் என்னும் ஒரு ஊரில் இறங்கி, பின்பு திருவாரூர் செல்லும் பேருந்தில் சென்று, பூந்தோட்டத்தில் இறங்கிக்கொள்ளவும். பூந்தோட்டத்திலிருந்து கூத்தனூர் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *