அருள்மிகு புல்வநாயகி திருக்கோயில், பாகனேரி

அருள்மிகு புல்வநாயகி திருக்கோயில், பாகனேரி, சிவகங்கை மாவட்டம்.
*********************************************************************************

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புல்வநாயகி
தல விருட்சம் நெய் கொட்டா மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் பாகனேரி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தின் பலனால் பூலோகத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை அழித்து, தங்களைக் காக்கும்படி மக்கள் சிவனை வழிபட்டனர். சிவன், அம்பிகை மூலமாக அவனை அழிக்க ஒரு தந்திரம் செய்தார். அப்போது, அம்பிகை விளையாட்டாக சிவனின் கண்களை மூட, அவர் சினமுற்று அம்பிகையை பூவுலகில் பிறக்கச் செய்தார். இங்கு வந்த அம்பிகை அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து, மாயையாக போர் புரிந்தான். ஒருகட்டத்தில் அவன், புல் வடிவம் எடுத்தான். அப்போது, அம்பிகை மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து, அவனை அழித்தாள். இவ்வேளையில் புதிய மானைக் கண்ட மக்கள் அதை நெருங்கினர். அம்பிகை ஓடிச்சென்று, ஓரிடத்தில் பூமிக்குள் புகுந்து கொண்டாள். மக்கள் அங்கு தோண்டியபோது, அம்பாளின் சிலை வடிவம் இருந்தது. மகிழ்ந்த மக்கள் அச்சிலையை இங்கு பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர். புல்வநாயகி என்றே பெயர் சூட்டினர்.

கோபுரத்தில் ஆன்மிகத்தை வளர்த்த விவேகானந்தர், சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட மகாத்மா காந்திஜி, காதலில் புதிய சரித்திரம் படைத்த ரோமியோ, ஜூலியட், சினிமாவில் காதலை வளர்த்த தியாகராஜ பாகவதர், ராஜகுமாரி சிலைகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே கோபுரத்தின் கீழே கைந்தவக்கால கணபதி சன்னதி உள்ளது. கோபுரத்தின் கீழே, இக்கோயிலின் தேரில் இருந்த சிலைகளைப் பிரதிட்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் பைரவர், முனீசுவரர், சனீசுவரர் உள்ளனர்.

கட்டிக்கொள்ளும் வழிபாடு:

பிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்குத் தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்றப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள். இதற்காக கோயில் எதிரேயுள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் வருகின்றனர். அம்பாள் சன்னதி முன் நின்று கொண்டு, கொடிமரத்தை கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வணங்குகின்றனர். அம்பிகை, தன்னை தஞ்சம் அடைந்தோருக்குத் துணையாக உடன் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.

ஒருநாள் தரிசனம்:

அசுரனை அழித்தபோது உக்கிர வடிவம் எடுத்த அம்பிகைக்கு இங்கு பஞ்சலோக சிலை உள்ளது. சாமுண்டீசுவரி எனப்படும் இவளது உக்கிரத்தை மக்களால் தாங்க முடியாதென்பதால், இச்சிலையை கருவறைக்குள்ளேயே வைத்துள்ளனர். இங்கு ஆனி மாதம் நடக்கும் திருவிழாவின்போது ஒருநாள் மட்டும் இவள் ஊருக்குள் வலம் வருவாள். அப்போது, அம்பிகையின் பார்வை மக்கள் மீது விழக்கூடாது என்பதற்காக, கண்களை பூமியைப் பார்த்தபடி அமைத்துவிடுவர். அன்று, புதிதாக திருமணம் செய்தோர், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் இந்த அம்பிகையைப் பார்க்க மாட்டர்.

விசேஷ தீர்த்தம்:

கோயில் எதிரேயுள்ள தீர்த்தம் மிக விசேஷமானது. வஜ்ரகிரீடம் என்ற புழு, காலப்போக்கில் கல் போன்று கடினத் தன்மையுடையதாக மாறும் தன்மை கொண்டது. இதை சாளக்ராமம் என்பர். இவ்வகையான புழுக்கள் இக்கோயில் தீர்த்தத்தில் உள்ளது. எனவே, இந்த தீர்த்த்தில் நீராடி அம்பிகையை வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் தல விருட்சமான நெய் கொட்டா மரத்தின் கீழ், அக்னியம்பாள் பீட வடிவில் இருக்கிறாள். பக்தர்கள் இவளுக்கு மஞ்சள், குங்குமத்தால் அபிசேகம் செய்து வேண்டிக்கொள்கின்றனர்.

திருவிழா: நவராத்திரி, ஆடிவெள்ளி, தை வெள்ளி

பிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்குத் தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்றப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள்.

அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு நடக்கும் விழாவின்போது மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் வித்தியாசமான வழக்கம் இன்றும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *