அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர்

அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர் -637 015, நாமக்கல் மாவட்டம்.
*************************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிடாரி செல்லாண்டியம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஒருவந்தூர்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை ஊர் மக்கள் அங்கிருந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்து கொண்டிருந்தார்கள். ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதி நின்றது. அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர அருட்சுடராக ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.

தவம், யாகம் என முயற்சி செய்து இறைவனைத் தேடி அடியார்கள் செல்வதுண்டு. ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் தங்களைத் தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் மக்கள். அவளுக்கு பச்சை பந்தல் போட்டு பூசை செய்தனர். இவ்விடத்திலேயே பிடாரி செல்லாண்டிஎன்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை.

காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும், பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோயில் உருவானது.

ஒப்பில்லாத ஒருவனாகிய ஈசன் செல்லாண்டியாகவும், அம்மன் செல்லாண்டியம்மனாகவும் இங்கு அருள் புரிகின்றனர்.

பிரகாரத்தில் மலையாள கருப்பண்ணசாமி, பட்டவன், மதுரை வீரன், சடைச்சியம்மன், பேச்சியம்மன் மற்றும் சப்த கன்னிமார்களும் அருள்பாலிக்கிறார்கள்.

சிவனும் பார்வதியும் இணைந்த சக்தியின் சொரூபம் தான் செல்லாண்டியம்மன் என்பது நம்பிக்கை. அம்பிகை வடக்கு நோக்கி நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதியை பார்த்திருப்பதால் இவ்வூர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்காக கோயிலைத் தோண்டும் போது ஒரு நீண்ட கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒரு குதிரையும், ஒரு மரமும், அதன் கீழ் உள்ள இலிங்கத்தை பார்வதி தேவி பூசை செய்வது போலவும் செதுக்கப்பட்டிருந்தது.

சிவனுக்கு ரிடபமே வாகனம். ஆனால், இங்கு குதிரைதான் வாகனம்.

பார்வதி பூஜை செய்து வரம் பெற்றதை போன்று வடிக்கப்பட்டிருப்பதால், பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த சிலையை வணங்கிப் பயனடைகிறார்கள்.

மாசிமகத்தை ஒட்டி தேரோட்டம் உள்பட 15 நாள் திருவிழாவும், மார்கழியில் வேல்திருவிழாவும் நடக்கிறது. இத்திருவிழாவின் போது தினமும் கோயிலின் வேல் மற்றும் பூசைப் பொருட்கள் மேளதாளத்துடன் எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் சென்று பூசை வாங்கி கொண்டு கோயில் வந்து சேர்கிறது. ஆடி கடைசி வெள்ளியில் 1008 பால் குட அபிசேகப் பெருவிழாவும், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூசையும் நடக்கிறது.

திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, நலம் பெறுகின்றனர். இத்தலத்தில் உப்பு மண் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்கு வேண்டுகிறார்கள்.

அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *