அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுக்(ஷ்)கோடி

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுக்(ஷ்)கோடி, ராமேசுவரம் – 623 526,
************************************************************************************************
ராமநாதபுரம் மாவட்டம்.
************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நம்புநாயகி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தனுக்(ஷ்)கோடி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்தார். தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தட்சிண காளியாகப் பெயர் பெற்றார். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்தார்கள். அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததார்கள்.

இது தகவல்.

இரண்டு முனிவர்களும் கற்பகோடி காலம் வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு இப்பகுதியிலேயே சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

ராமேசுவரம் சிங்களர்களின் பிடியில் இருந்தபோது சூலோதரன் என்ற சிங்கள மன்னன் இந்த தீவின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான மண் குன்றில் கோட்டை ஒன்றை அமைத்து ஆட்சிசெய்து வந்தான். அந்த மன்னனுக்கு தீராத நோய் கண்டு எந்த மருத்துவமும் பயனளிக்காத நிலையில் தட்சிண காளியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தான்.

உடன் இருந்த சகோதரர்கள், மற்றும் அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் தட்சிண காளியே கதி என்று முடிவு செய்த சூலோதரன், காளிஅம்மன் வீற்றிருந்த குடிசையின் அருகிலேயே ஒரு சிறிய குடிலை அமைத்து அங்கேயே தங்கினான்.

கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நன்னீர் தடாகங்களில் நீராடிக் காளியை வணங்கிவர முற்றிலும் நோய் நீங்கி நலமடைந்தான். நம்பி வந்து வணங்கியதால் துயர்துடைத்த தட்சிண காளி அம்மனுக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை அமைத்த சூலோதரன், தன்னைப்போல் தீராத பிணிகளுடன் வரும் பக்தர்கள் தங்கி நலமடைந்து செல்லப் பல வசதிகளையும் செய்து கொடுத்தான். காளியைக் கேலி செய்தவர்கள் பெரும் நோய்க்கு ஆளானார்கள். எனவே,”நம்பு நாயகியை வணங்கினால் வம்பில்லைஎன்ற சொலவடை உருவாயிற்று.

பின்னாளில் பல்வேறு காலகட்டத்தில் தற்போது உள்ள பழமையான கோயில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மராட்டிய பிராமணர்களின் குலதெய்வமாக விளங்கும் நம்புநாயகியின் திருப்பெயரை இந்த பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர்.

குழந்தை வரம் வேண்டுமென்று நம்பியே கும்பிட்டேன் நாயகியை; பூ கொடுத்தால் வாடுமென்று எனக்கு நம்பு நாயகியாள், மைந்தன் தந்தாள் அவள் பேரு சொல்லஎன்று பெண்கள் பாடுகின்ற தாலாட்டு பாட்டு வரிகள் கேட்டுத் தூங்கும் மழலைகள் ஏராளம்.

திருவிழா: நவராத்திரி

நவராத்திரியின் போது 9 நாட்களும் நம்புநாயகி அம்மன் நவசக்திகளின் வடிவமாகக் கொலுவில் இருந்து 9 வது நாளில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேடமாகும்.

குழந்தை இல்லாதவர்களும், திருமணம் தள்ளிப்போகும் கன்னிகளும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நம்புநாயகியை வழிபட்டால் விரைவில் வேண்டுதல் பலிக்கும்.

தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடிக் குணமடைகிறார்கள்.

கோயில் பூசாரி தரும் அம்மனுக்கு சாத்திய மஞ்சள் காப்பு பிரசாதத்தை உண்டு குணமடைந்து செல்லும் அதிசயமும் உண்டு.

பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *