அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர்

அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர் – 605203, விழுப்புரம் மாவட்டம்.
**********************************************************************************************

+91-90940 61721 (மாற்றங்களுக்குட்பட்டது)

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற நாட்களில் காலை, மாலையில் சிறிது நேரம் மட்டுமே கோயில் திறக்கப்படும்.

மூலவர்: – நாககன்னியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – தும்பூர்

மாவட்டம்: – விழுப்புரம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஆமத்தூர் என்ற தலத்தில் (விழுப்புரம் அருகே உள்ளது) திருவட்டப்பாறை என்ற பகுதி இருந்தது.

ஒருமுறை இப்பகுதியை ஆண்ட அரசனின் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. தம்பி ஒருவன் தனது அண்ணன் தனக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டதாகப் புகார் கூறினான். அந்த அண்ணன், தனது சொத்துக்களையும், தம்பிக்குரிய சொத்துக்களையும் விற்று, அத்தொகைக்கு ரத்தினக் கற்கள் வாங்கி, துவாரமுள்ள ஒரு கம்புக்குள் வைத்து, ஊன்றுகோல் போல, அதை கையில் வைத்துக் கொண்டு திரிந்தான்.

அரசன் அண்ணனை அழைத்து விசாரித்தான். “அந்தப் பாவி பொய் சொல்கிறான் அரசே,” என அண்ணன் குற்றச்சாட்டை மறுத்தான். அண்ணனின் வீட்டில் சோதனையிடப்பட்டது. அங்கு ஊன்றுகோலைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அரசனுக்கு குழப்பமாகி விட்டது. திருவட்டப்பாறையில் ஏறி சத்தியம் செய்யும்படி உத்தரவிட்டான்.

அண்ணனும், தம்பியும் ஏறினர். தன் கையிலிருந்த தடியை மிகவும் சமயோசிதமாக, தனது தம்பியின் கையில் கொடுத்த அண்ணன்,”இப்போது எனது சொத்துக்களும், என் தம்பியின் சொத்துக்களும் என் தம்பி கைவசமே உள்ளது. என்னிடம் எதுவுமே இல்லை,” எனக்கூறி சத்தியம் செய்தான். அவனுக்கு எதுவும் ஆகவில்லை. தம்பியோ அதிர்ச்சியடைந்தான். தனது கம்பை பெற்றுக் கொண்ட அண்ணன் நல்லவன் போல் நடித்து அங்கிருந்து அகன்றான்.

சற்று தூரம் சென்றதும், தன் நண்பர்களிடம் பார்த்தீர்களா! என் திறமையை. சொத்தும் எனக்கு கிடைத்தது. என் தம்பியின் பெயரையும் கெட்ட பெயராக்கி விட்டேன். “திருவட்டப்பாறை மிகவும் சக்தி வாய்ந்தது. பாம்பு கடித்து விடும்என்றெல்லாம் சொன்னார்கள். “என் விஷயத்தில் அவ்வாறு ஆகவில்லை,” என்று கூறி அட்டகாசமாக சிரித்தான்.

அந்த நிமிடமே திருவட்டப் பாறையின் கீழிருந்த பாம்பு சீறி எழுந்தது. அண்ணனை விரட்டியது. அவன் நீண்ட தூரம் ஓடினான். ஆறு மைல் தொலைவு ஓடியும் நீண்டு கொண்டே வந்த பாம்பு அவனை துரத்தியது. ஓரிடத்தில் அவனைக் கொன்றது.

கொன்ற இடத்தில்(தும்பூரில்) தலையும், அவனை துரத்தி வந்த வயல் பகுதியில் உடலும், வால் பகுதி தும்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ஆமத்தூர் முத்தாம்பிகையின் உடலிலும் சுற்றி இருப்பதை இப்போதும் காணலாம்.

தமிழகத்தில் நாகர்கோவிலில் உள்ள நாகராசா கோயிலில் தான் பாம்பு மூலவராக உள்ளது என இதுவரை கேள்விப் பட்டுள்ளோம். தும்பூர் கோயிலிலும் பாம்பே மூலவர். நாகர்கோவிலில் நாகராசாவாகவும், தும்பூரில் நாக கன்னியாகவும் வழிபடப்படுகின்றனர்.

தீராத வழக்குகளைப் பொறுத்தவரை அரசர்களுக்கு இங்குள்ள திருவட்டப்பாறை ஒரு வரப்பிரசாதம். ஒருவன் பொய் சொல்வதாகக் கருதினால், அவனை இப்பாறை மீது ஏறச்சொல்லி, சத்தியம் செய்யச்சொல்வது வழக்கம்.

ஒருவேளை அந்த ஆசாமி பொய் சொன்னால் அவனது கண்கள் குருடாகி விடும் என்பதும், பாம்பு கடித்து இறந்து விடுவான் என்பதும் ஒரு நம்பிக்கை.

21 அடி, 41 அடி, 77 அடி என தற்காலத்தில் அமைக்கப்படும் உயரமான சுவாமி சிலைகளைப் பார்த்தே நாம் மூக்கின் மேல் விரலை வைக்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் பத்து கி.மீ., நீளத்திற்கு பாம்பு சிலை அமைத்துள்ளனர்.

இன்று அச்சிலையை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும், தலையை ஒரு இடத்திலும், உடலை ஒரு இடத்திலும், வாலை பத்து கி.மீ., தள்ளி சென்றுமே பார்க்க முடிகிறது. இந்த அதிசய பாம்பு தெய்வத்தை நாககன்னிஎன அழைக்கின்றனர்.

திருவிழா:

சித்திரை மாத வெள்ளிக்கிழமைகள், காணும் பொங்கல் ஆகிய நாட்களில் இங்கு விசேட பூசை உண்டு.

ராகு, கேது தோசம் நீங்க இங்கு வேண்டுதல் செய்கின்றனர்.

வேண்டுதல் நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *