அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை

அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம்
****************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அம்மன் : – முத்துமாரியம்மன்

பிறபெயர் : – பூவாடைக்காரி

தல விருட்சம் : – வேம்பு

விசேசம் : – முருக எந்திரம்

தீர்த்தம் : – ஆகாச ஊரணி, தலவர் சிங்கம், பொழுதுபடாசுணை

பிறதீர்த்தம் : – தளும்புசுணை

ஊர் : – நார்த்தாமலை

புராணபெயர் : – நாரதகிரிமலை

பிறபெயர் : – நகரத்தார்மலை

மாவட்டம் : – புதுக்கோட்டை

இத்திருக்கோயிலின் அம்மன் சிலை நார்த்தாமலையிலிருந்து சுமார் 4 கல் தொலைவிலுள்ள கீழக்குறிச்சி என்னும் கிராமத்தில் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும், இச்சிலையை இந்த ஊரில் உள்ள குருக்கள் பிரதிட்டை செய்து, சிறிய கோயில் ஒன்று எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் திருவண்ணாமலை சமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் இங்கு வந்து அம்பாளின் அருளினால் தன் சொந்த முயற்சியால் இத்திருக்கோயிலை விரிவுபடுத்தியும், மண்டபங்கள் எழுப்பியும் விழாக்கள் நடத்தியும் புகழ் பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அம்மன் சன்னதியின் வடபுற சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கல்லிலாலான முருகன் எந்திரம் மிகவும் விசேடம் என்று கருதப்படுகிறது.

தேவ ரிசி நாரதர் இங்கு தங்கி தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது. நாரதர் பெருமான் இம்மலையில் வந்து தங்கியதால் நாரதர் மலை என்று வழங்கப்பட்டதாகவும் காலப்போக்கில் நார்த்தாமலை என்று வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாடு போற்றும் நார்த்தாமலை:

நல்லவர்களின் நாட்டமும் மன்னர்களின் கண்ணோட்டமும் பெற்ற நார்த்தாமலை, மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை,மண்மலை, பொன்மலை என்ற ஒன்பது மலைக் குன்றுகளுக்கு மத்தியில் ஓங்காரமாய் அமைந்து விளங்குகிறது. அங்கு நிமிர்ந்து நிற்கும்மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும் ஒரு பழங்கதையை உணர்த்தும் விதமாய் அமைந்துள்ளன.

இலங்கைப் போரில் மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை வாயு புத்திரனாகிய அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே அதைத் தூக்கி வரும் போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் நார்த்தாமலையில் உள்ள இக்குன்றுகள் என்பதே அக்கதையாகும். நிறைய மூலிகை தாவரங்கள் இம்மலையில் இருக்கிறது என்பது முக்கிய விசயம்.

பங்குனித் திருவிழா – 10 நாட்கள் நடக்கும். இந்த பங்குனித்திருவிழா இத்தலத்தின் மிக உச்சமான திருவிழா ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வது முத்துமாரியம்மன் அருளுக்கும் ஆட்சிக்கும் சாட்சி. ஆடிக் கடைசி வெள்ளி ஒரே ஒருநாள் மட்டுமே நடக்கும் திருவிழா என்றாலும் அன்றைய தினமும் நாலாபுறமும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனின் அருள் பெறுவது சிறப்பு தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விசய தசமி , தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.

கோரிக்கை:

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரும்பு தொட்டில் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

அக்னி காவடி எடுத்தால் தீராத வியாதிகள் குணமாகின்றன.
அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் குணமடைகிறார்கள். அதனால் இத்தலத்தில் பக்தர்கள் வருகை மிக அதிக அளவில் இருக்கிறது.

நேர்த்திக்கடன்:

மாவிளக்கு , அக்னிக் காவடி, கரும்புத் தொட்டில், பறவைக் காவடி எடுத்தல், அம்மனுக்கு விளக்குப் போடுதல், புடவை சாத்துதல். இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்.

வழிகாட்டி :

திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் இருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி உண்டு. திருச்சியிலிருந்து -35 கி.மீ. புதுக்கோட்டையிலிருந்து – 18 கி.மீ.

நார்த்தாமலையில் புகைவண்டி நிலையம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *