அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம்

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம் (தாடிக்கொம்பு)- 624 709. திண்டுக்கல் மாவட்டம்.

+91 98657 72875 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தாலம்மன்

உற்சவர்: – கிளி ஏந்திய முத்தாலம்மன்

தல விருட்சம்: – அரசு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – அகரம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

விசயநகரப் பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் தென்திசை வந்தார்.

வருமுன், அவர் தினமும் வணங்கும் அம்பாளை நோக்கி,”அம்மா. நான் தென் திசை செல்லுகின்றேன். அங்கு எந்தக் கோயிலில் உன்னை வணங்குவேன்?” என்று கேட்டார். அதற்கு அம்பாளும், “இங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கொண்டு செல். எங்கே இருந்து என்னை வணங்க நினைக்கிறாயோ அந்த இடத்தில் இந்த மண்ணை வைத்துவிட்டு என்னை அழை. நான் வருவேன்என்றாள். அதன்படி வரும்போது, அவர் வணங்கி வந்த அம்பாள் கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்துக் கொண்டு வந்தார். அம்பிகை உத்தரவுப்படி அம்மண்ணை இவ்விடத்தில். அங்கு ஒரு கல்லை மட்டும் வைத்து அம்பிகையை வணங்கி வந்தார். பிற்காலத்தில் இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்பிகையர் சிலை வடித்து பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினார். அம்பிகைக்கு முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காக தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில் ஊருக்கு அகரம்என்ற பெயர் ஏற்பட்டது.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் கருவறையில் உள்ளனர்.

இம்மூவரும் நின்றபடி, கையில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் இருக்கின்றனர். இதனால், இவர்களிடம் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இப்பகுதி மக்களுக்கான பிரதான குலதெய்வ வழிபாட்டுத்தலம் இது. பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு விசேஷ பூஜை உண்டு.

பிரகாரத்தில் விநாயகர், பாலமுருகன், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. முருகனுக்கு கிருத்திகை நாட்களில் விசேச பூஜை உண்டு. குரு, சனிப்பெயர்ச்சி காலங்களில் கிரக பரிகார யாகங்களும் நடக்கும்.

உத்தரவு தரும் காவல் தெய்வம்:

கோயில் வளாகத்தில் அம்பாள் சன்னதிக்கு இருபுறமும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இக்கோயிலில் விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு கேட்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க பூதராசாவிடம் உத்தரவு கேட்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராசா முன் நின்று கொண்டு, தங்கள் பிரார்த்தனையைச் சொல்வர். அப்போது, பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை துவங்குகின்றனர். அதேநேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப்போட்டுவிடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் உண்டு.

மஞ்சள் பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் கிடைக்க அம்பாள் சன்னதியில் 5 எலுமிச்சை மற்றும் குளியல் மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்பாள் பாதத்தில் வைத்து பூசித்து, ஒவ்வொன்றிலும் மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருவார். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கை குளித்தும் வர குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள்.

சுரலிங்கேசுவரர்:

குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது. இங்குள்ள விநாயகர் ஞானத்துடன், வேண்டும் வரங்களையும், செயல்களில் வல்லமையும் பெற அருள் செய்பவர் என்பதால் அருள்ஞானசுந்தர மகாகணபதிஎன்றே அழைக்கப்படுகிறார். திருமணத்தடை உள்ளோர் இவருக்கு தேங்காய் மாலை அணிவித்து வேண்டிச்செல்கின்றனர். இங்கு விசாலாட்சி அம்பிகையுடன், ஐந்து முகங்களுடன் கூடிய சுரலிங்கேசுவரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இலிங்கத்தின் நான்கு புறமும் நான்கு முகங்கள் உள்ளது. மற்றொரு முகத்தைக் காண முடியாது. பிரதோச பூசையும், ஐப்பசியில் அன்னாபிசேக வைபவமும் இவருக்கு விசேடமாக நடக்கும்.

விழாச் சிறப்பு:

ஐப்பசி மாத முதல் செவ்வாய்க் கிழமையை 10ம் நாளாகக் கணக்கிட்டு, இங்கு விழா நடக்கிறது. 9ம் நாள் காலையில் அம்பிகைக்கு கண்திறப்பு வைபவம் நடக்கும். பின், அம்பிகை ஆயிரம் பொன் சப்பரத்தில் கொலுமண்டபம் செல்ல, அங்கு விசேச பூசைகள் நடக்கும். 10ம் நாளில் மண்ணால் செய்யப்பட்ட அம்பிகை, சொருபட்டை என்னும் விமானத்தில் பூஞ்சோலை எனப்படும் மைதானத்திற்கு செல்வாள். மழையில் கரையும்விதமாக அமைக்கப்படும் விமானம் இது. மைதானத்தில் சிறப்பு பூசை செய்தபின், அம்பிகையை அங்கேயே வைத்து விடுவர். அதன்பின், 3 அல்லது 4 நாட்களுக்குள் மழை பெய்து, சிலை அதுவாகவே கரைந்து விடுவதாகச் சொல்கின்றனர்.

திருவிழா:

ஐப்பசியில் பிரம்மோத்சவம், ஆடி வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகையன்று லட்சதீபம், மார்கழி மாதம் முழுதும் விளக்கு பூசை, சுரலிங்கேசுவரருக்கு சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிசேகம்.

குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர். புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க காவல் தெய்வமான பூதராஜாவை வணங்குகின்றனர்.

அம்பிகையை வேண்டிக் கோரிக்கை நிறைவேறியவர்கள் அபிசேகம் செய்தும், முடிக்காணிக்கை, அங்கபிரதட்சணம் செய்வித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *