அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்.
*******************************************************************************************

+91- 4328 2325444 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணிக்கு சந்நிதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.

மூலவர்: – மதுரகாளி

தல விருட்சம்: – மருதமரம்

தீர்த்தம்: – திருக்குளம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – சிறுவாச்சூர்

மாவட்டம்: – பெரம்பலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மன அமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறகின்றன. சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.

ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இந்த அம்மனைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.

மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித்தங்குகிறாள். வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள்.

செல்லியம்மன் அன்னையின் திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். செல்லியம்மன் அருகிலிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள்.

செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூசையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலையை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பின்னர் மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையில் திருக்கோயில் அமைந்துள்ளது. இது குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்.

எழிலார்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறது. அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். தலத்தின் காவல் தெய்வமாக அய்யனார் உள்ளார்.

சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.

வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொணர்ந்து ஊற வைத்து, இடித்து, இங்கேயே மாவிளக்கு மாவு தயார் செய்கிறார்கள். பின்பு அதன்மேல் நெய்விளக்கு வடிவமைத்து, அதை சந்நிதியில் ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன. இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவு இடித்துத்தரப் பணியாளர்களும் உள்ளனர்.

மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.

அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்சயபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம்.

திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழில் இல்லை. அருளும் நிலையிலேயே காட்சி.

பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூசை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது.

ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அமாவாசைக்கு பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன.

சிறப்பு வழிபாடு :

மேலும் தமிழ், ஆங்கிலப்புத்தாண்டு நாட்கள், ஆடி 18 ம் பெருக்கு, புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகையில் தீபத்திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப் பொங்கல், தைப்பூசம், மாசியில் சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் ஆலயம் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

கல்யாண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், வியாபார சிக்கல் ஆகியவை தீரவும், காணாமல் போன பொருட்கள் கிடைக்கவும் இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அம்மன் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதுதான் மிகவும் பிரபலம். வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று நேர்ந்து கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இவை தவிர இத்தலத்தில் அங்கபிரதட்ணம் செய்வதும் உண்டு. இவை தவிர பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிசேகம், ஆராதனைகள், அன்னதானம் ஆகியவற்றை செய்கிறார்கள்.

One Response to அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்

  1. Balasubramanian NR says:

    கனவா அல்லது நினைவா ஒன்றும் தெரியவில்லை, ஸ்ரீ மதுரகாளியினுடைய அழகான திருவடிகளுக்கு தாமரை மலர் போட்டு துதிக்கிறேன். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஸ்ரீ மதுராம்பிகா அனுக்ரஹம். அடியேன்அம்பாள் நினைவுடன்பக்தர்களில் ஒருவன்னாக அதீத பக்தியில் அன்னைக்கு சாஷ்டங்க நமஸ்காரம் செய்கிறேன். கைகால் ஓடவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். பக்தர்களுடன் ஒன்று பட்டு ஐக்யமாகி, அவர்களுடனேயே இருக்கிறாள். அம்பாளுக்குத்தான் எத்தனை பெருமைகள். அம்பிகை வண்ண வண்ண மாலைகளைச் சூடியவளாக அழகான திவ்யரூபத்தில் காட்சி. இப்படிப்பட்ட சிறுவாச்சுர் தலத்தில் வசிப்போரும் பெருமை உடையவர்களாகத்தானே இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *