அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் – 624401, திண்டுக்கல் மாவட்டம்.
****************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – இரசம்மாநகரம்

ஊர்: – நத்தம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

லிங்கம நாயக்கன் இப்பகுதியை ஆண்டு வந்த போது, அரண்மனைக்குப் பால் கொண்டு வருவபர் தினமும் பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் பால் குடம் காணாமல் போய்க் கொண்டே இருந்தது.

மன்னனுக்குத் தகவல் தெரிந்து, அந்த இடத்தைப் பார்வையிட்டான். அந்த இடத்தில் சிலை ஒன்று மண்ணில் மறைந்திருப்பது கண்டு கடப்பாறை கொண்டு தோண்ட உத்தரவிட்டான்.

தோண்டும் போது அம்மன் தோளில் கடப்பாறை பட்டுவிட்டதால் ரத்தம் பீறிட்டது. அச்சிலையை எடுத்து மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே லிங்கம நாயக்கன் பிரதிட்டை செய்தான். ரத்தம் பீறிட்டு வெளிவந்த அம்மன் இருப்பதால் அவ்வூரின் பெயர் ரத்தம்என்றாகிக் காலப்போக்கில் நத்தம்என்று அழைக்கப்பட்டது.

மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு.

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி, மூலிகை பச்சிலை உண்டால் குழந்தைச் செல்வம் கிட்டும்.

டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன. வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.

திருவிழா:

மாசிமாதம் அமாவாசை அன்று கன்னிமார் தீர்த்தம் எடுத்து வருதலுடன் திருவிழா ஆரம்பிக்கிறது. நத்தம் அருகில் உள்ள கரந்த மலையில் கன்னிமார் தீர்த்தம் உள்ளது.

சந்தன கருப்பு கோயிலில் மஞ்சள் ஆடையுடன் ஒரு மைல் நீளத்துக்கு ஒரே கூட்டமாக சென்று தீர்த்தம் எடுத்து வருவர். பின்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கும். கம்பம் என்பது ஒரே மரத்தில் 3 கிளைகளையுடையதாகும்.

இது பார்ப்பதற்கு திரிசூலம் போன்றிருக்கும். அம்பாள் தன் கணவரோடு இந்த பதினைந்து நாட்களுக்காவது இருக்க விரும்புவதால்தான் இந்த கம்பம் இறைவனாக நினைக்கப்பட்டு கோயில் நுழைவில் நடப்படுகிறது.

கழுமரம்(வழுக்கு மரம்) ஏறுதல் என்ற மயிர் கூச்செறியும் நேர்த்திகடன் நடக்கிறது. சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரம் வழுவழுவென செதுக்கி விளக்கெண்ணெய், மிளகு, கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களால் பூசப்பட்டு நடப்படும். அதன் மேல் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள்.

பூக்குழி இறங்குதல்:

பின்பு 14 அடி நீள நெருப்பு கங்குகள் பரப்பப்பட்ட பாதையில் அம்மனை நினைத்தபடியே இறங்கி நடந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துவார்கள்.

திருவிழா நாட்களில் 40 லட்சம் மக்கள் கூடுவது தனிச்சிறப்பு.

கோரிக்கைகள்:

குழந்தைச் செல்வம் பெற, அம்மை நோய் தீர, உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர்.

தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், கழு மரம் ஏறுதல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தல் முதலியவற்றைப் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *