அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம்

அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், மேட்டு மகாதானபுரம் -639 106, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.
*********************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மகாலட்சுமி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம்

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின் பெயர் சிவபெருமான். இவரிடம் பணிபுரிந்தவர் குரும்பநாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்த ஊர் மக்கள் பக்தியில் சிறந்து விளங்கினர். குரும்பநாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கி வந்தார். அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குரும்ப இனத்தில் பிறந்தார்.

தினமும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் பொருட்களை ஒரு கம்பளியில் கட்டி எடுத்துவந்து ஊர் எல்லையில் கொடுத்து அனுப்புவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தார்.

குரும்ப இனத்தவரின் தொழில் ஆடு மேய்ப்பது ஆகும். ஆட்டின் முடியில் செய்த கம்பளியில் அந்த பொருட்களை எடுத்து வருவார். எல்லாரிடமும் பணிவாக நடந்து கொள்வார்.

இறைவனின் பாதங்களைத் தன் நெஞ்சில் வைத்து வணங்குவதே தன் கடமை என எண்ணி வாழ்ந்து வந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்புகொண்டு வணங்கி வந்ததால் இவருக்கு அட்டமாசித்திகள் கிடைத்தன. “நமசிவாயஎன்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் ஓதி வந்தார்.

இந்த நேரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் கைலாயத்திற்கு அழைக்க முடிவு செய்தார். இதை அறிந்த குரும்ப நாயனார், தன் குருவை பிரிந்து தனித்துவாழ இயலாது என வருந்தினார். தன் குருவுக்கு முன்னதாக யோகநெறியின் மூலம் சிவபெருமானின் திருவடியை சேர்வேன் என முடிவெடுத்தார். அதன்படியே சிவலோகத்திற்கும் சென்று சிவனின் திருவடியின்கீழ் அமர்ந்தார். பெரியபுராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

குரும்ப நாயனாரின் குலதெய்வம் ஆதிமகாலட்சுமி. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது உருவானவள் மகாலட்சுமி. அப்போது பெருமாள் அமிர்தத்தை தேவர்களுக்கும், விடத்தை அசுரர்களுக்கும் பங்கிட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தகாசூரன் என்பவன் இதை தனது ஞானத்தால் அறிந்துகொண்டு விடத்திலிருந்து தப்பிக்க ஓடிச்சென்றான்.

அப்போது மகாலட்சுமியைப் பார்த்தான். அவள்மீது மோகம் கொண்டு அருகில் சென்றான். மகாலட்சுமி காவிரிக்கரை வழியாக ஓடினாள். அசுரனும் விரட்டி வந்தான். அப்போது ஆடு மேய்க்கும் குரும்ப இனத்தவர்கள் மேட்டுமகாதானபுரம் என்ற இடத்தில் தங்கள் தொழிலை செய்து கொண்டிருந்தார்கள். மகாலட்சுமி அசுரனிடமிருந்து தப்ப குரும்பர் இனத்தவர் இருந்த இடத்தில் பூமிக்குள் ஒளிந்துகொண்டாள்.

அந்த இடத்தில் சிவபக்தனான ராவணன் ஈசனை நினைத்து தவமிருந்து கொண்டிருந்தான். மகாலட்சுமி அங்கு ஒளிந்திருப்பதை அறிந்த ராவணன் தன்னை அழிப்பதற்கே அவள் வந்திருக்கிறாள் என கருதி இலங்கைக்கு சென்றுவிட்டான்.

மகாலட்சுமி குரும்பர்கள் கறக்கும் ஆட்டுப்பாலை அவர்கள் அறியாமலேயே குடித்துவந்தாள். இதை மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். ஒரு இடத்தில் ஈரமாக இருந்ததை பார்த்த மக்கள் அந்த இடத்தை தோண்டினர். அப்போது மகாலட்சுமி சுயம்புவாக காட்சிதந்து அசுரனிடமிருந்து தன்னை காக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாள்.

தெய்வமான மகாலட்சுமி மக்களிடம் தன்னைக் காக்கவேண்டும் என்று கூறியது அவர்களை சோதிக்கத்தான். உடனே மக்கள் மகாலட்சுமியை ஒரு கம்பளியில் சுற்றி மறைத்து வைத்துவிட்டார்கள்.

அசுரன் இதைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் சண்டை செய்தான். அம்மனையும் பிடித்து விட்டான். மக்கள் இறைவனிடம் அந்த பெண்ணைக் காக்க வரவேண்டும் என வேண்டினர். முக்கண் உடைய சிவபெருமானை நினைத்து உருகி பாடல்கள் பாடினர். ஆனாலும் சிவபெருமான் வரவில்லை.

எனவே முக்கண் உடைய தேங்காயை எடுத்து சிவபெருமான் அங்கு வரும்வரை தங்கள் தலையில் உடைத்து வணங்குவோம் என வேண்டிக்கொண்டு அவரவர் தலையில் தேங்காயை உடைக்கத் தொடங்கினார்கள். மக்களின் பக்தியை மெச்சிய சிவன் அங்கு தோன்றி அம்மனை காப்பாற்றினார்.

இந்த அம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கோயிலை சுற்றிவர மூன்று பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆடிப்பெருக்கு திருவிழா இங்கு விசேஷமாக நடைபெறும். அன்று பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற , கல்வியில் சிறந்து விளங்க வேண்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *