அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்), வேலூர் – 632 055, வேலூர் மாவட்டம்
*************************************************************************************************************

+0416 227 1855, 227 1202 (மாற்றங்களுக்குட்பட்டவை)

சிதம்பரம் நடராசர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் கருவறை விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களுக்குப் பொற்கோயில் உள்ளது.

பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம்.

வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணிகோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

ஏழுமலையானின் பார்வையில் திருமகள்

வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண் பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது. மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு ஸ்ரீபுரம்என்று பெயர் மாற்றப்பட்டது. “ஸ்ரீஎன்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணி பீடத்தையும் தரிசிப்பது அவசியம்.

மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. கருவறையில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்கக் கவசம், தங்கக் கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள். தங்கத்தில் தகதகக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் எட்டு ஐசுவரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

சுயம்பு லட்சுமிநாராயணி

வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள். லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, இத்தகைய சுயம்பு கோலத்தை காண்பது அரிதிலும் அரிது.

18 நுழைவு வாயில்கள்

வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்க கோயிலின் நோக்கம்:

தங்கக் கோயிலை எழுப்பிய சக்தி அம்மா, ஏன் இந்தக் கோயில் தங்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது பற்றி கூறும்போது,”மக்களை ஆன்மிக சம்பந்தமான கருத்துக்களை கேட்க வைப்பதும், கோயிலுக்கு வரவழைப்பதும் கடினம். இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில் என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள். அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதுடன், உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச் செல்வார்கள்,”என்றார்.

தகவல்கள்:

100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்ரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்ரம் போன்றே தெரியும்.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா, தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.

கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

காலை 7 முதல் இரவு 8 மணிவரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும். இங்கு வரும் அனைவருக்கும் போதுமான அளவு பிரசாதம் தரப்படுகிறது.

கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது.

இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவைப் பகலாக்குகின்றன.

கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் கலர் கலராக காட்சியளிக்கின்றன. சுத்தமான காற்று வீசுகிறது.

மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது என்று பெயர்க்குச் சொன்னாலும் ஒரு சுற்றுலாவில் கிடத்த மகிழ்ச்சி கிட்டும்.

கோயிலில் நுழைந்து தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும் தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் தகதகக்கிறது.

அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பிரம்மாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில் ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம்.

கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும், புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை, லட்சுமி, சரசுவதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன.

அனைவருக்கும் இலவச தரிசனம் உண்டு. சிறப்பு தரிசனத்திற்கென தனி டிக்கெட் கிடையாது என்பதால் அனைவரும் ஒரே இடத்தில் நின்று சிறப்பான முறையில் தரிசனம் செய்ய முடிகிறதுஎன்று சொல்கிறார்கள். ஆனால், நடப்பதோ!!!

இலக்குமியைக் கிட்ட இருந்து தரிசிக்க வேண்டுமானால் ஐநூறு ரூபாய் கொடுத்துச் சீட்டு வாங்க வேண்டும். கொஞ்சம் தள்ளி இருந்து பார்க்க இருநூறு ரூபாய்க் கட்டணம். இலவச தரிசனம் தள்ளியிருந்து பார்க்கவேண்டும். சீட்டு வாங்கியவங்களுக்கு மட்டுமே குங்குமப் பிரசாதம் என்பது மனதை நெருடும் விடயமே.

கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியே சென்றதும் கோயில் மடப்பள்ளியில் செய்யப்பட்ட பிரசாதம் அனைவருக்கும் வழங்குகிறார்கள். (தினமும் சாம்பார் சாதமே கொடுக்கிறார்களே என்றும் சொல்கிறார்கள்.)

சுத்தமான குடிநீரை கோயில் நிர்வாகமே கொடுக்கிறது.

நடக்க முடியாதவர்களுக்கு என சக்கர நாற்காலி இருக்கிறது(கட்டணத்தில்)

வழிகாட்டி:

வேலூரிலிருந்து தெற்கே ஊசூர் அணைக்கட்டு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் ஸ்ரீபுரம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *