அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம்.
*****************************************************************************

+91 427 2267 845 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கோட்டை மாரியம்மன்

தல விருட்சம்: – அரச மரம்

தீர்த்தம்: – மணிமுத்தாறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சேலம்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும் . அம்மன் ஈசாணி மூலையை பார்த்தபடி உள்ளது. எவ்வளவு பெரிய பதவி உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற அம்பாள் தலங்களில் மனித தலை இருப்பது போல் அல்லாமல் இந்த அம்மனின் காலடியில் தாமரை மொட்டு உள்ளது.

நைவேத்தியம்படைக்கப்படுவதில்லை. மாறாக இத்தலத்தில் எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பு.

ஆடித்திருவிழா இது இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும். இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று பிற மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்று தொட்டு வரும் நிகழ்ச்சி ஆகும்.

இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிசேகம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.

மண் உரு சாத்துதல் :

அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று சாப்பிட்டு, நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும்.

கண்ணடக்கம் சாத்துதல் :

கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக்கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்துவர்.

உருவாரம் சாத்துதல் :

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பர்.

அடியளந்து கொடுத்தல் :

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை திருக்கோயிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.

உப்பு மிளகு போடுதல் :

பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.

இத்தலத்தில் வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தச் செல்வம் கிட்டும்.

பூப்போட்டுப் பார்த்தல் :

இத்திருக்கோயிலில் பூப்போட்டு கேட்டல் பிரசித்தமானது. குடும்பத்தில் சிக்கல் தீர, திருமணம் நடைபெற, நோய் தீர, உத்தியோகம் கிடைக்க, இப்படி தங்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பக்தர்கள் வெள்ளை , சிவப்பு நிறங்களில் உள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள். தாம் நினைத்த நிறப் பூ வந்து விட்டால் தாம் எண்ணி வந்த செயல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *