அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி

அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி – 630 001. சிவகங்கை மாவட்டம்.
**************************************************************************************************

+91 -4565 2438 861, 99428 23907 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கொப்புடை நாயகி அம்மன் உற்சவர்: – கொப்புடை நாயகி அம்மன்

தல விருட்சம்: – வில்வமரம்

தீர்த்தம்: – கல்லுகட்டி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காரைக்குடி

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த, வனப்பகுதியாக இருந்திருக்கிறது. ஊராக அமைப்பதற்காக இந்த காட்டை அழித்து திருத்தி, மக்கள் குடியேற வசதியாக நகர் உண்டு பண்ணினார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊரில் மக்கள் குடியேறியதால் இப்பகுதி காரைக்குடி ஆனது. ஊர்கள் தோறும் சிறப்பான கிராம தேவதை கதை போன்றதே இத்தலத்திற்குரிய கதையும் ஆகும். செஞ்சை காட்டுப்பகுதியில் இக்கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோயில் உள்ளது. இந்த காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன்.

கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை. ஆனால் காட்டம்மனுக்கோ ஏழு பிள்ளைகள். இந்த பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப் பண்டங்களைத் தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன் தங்கை இப்பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள்.

இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டுப் பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்று இக்கோயில் குறித்து வரலாற்றுக் கதை சொல்லப்படுகிறது.

ஆதிசங்கரர் வழிபட்ட தலம் : ஆதிசங்கரரே வந்து வழிபாடு செய்த காரைக்குடி அம்மனுக்கு கொப்புடையாள் என்று பெயர். கொப்பு என்றால் கிளை என்று பொருள். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் சுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவ திருமேனியாக காட்சி தருகிறாள்.

இதில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல்கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது.

கிழக்கு பார்த்த துர்க்கை :

அம்மன் ஸ்ரீ சக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். பொதுவாக காளி, துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும். ஆனால் இங்கு அம்மன், துர்க்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறாள். எனவே இவளை வணங்கினால் கல்வி, செல்வம், வீரம் என மனிதனுக்கு தேவையான மூன்றையுமே வாரி வழங்குவாள்.

இக்கோயிலில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால், காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.

கட்டுத்தேர் :

இக்கோயிலில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தேரோட்டம் மிகவும் விசேஷமானது. பனைமரச்சட்டங்களாலான இத்தேர் தையிலான் கொடி கொண்டு இணைத்து முறுக்கேற்றி கட்டப்படும். எட்டாம் நாள் திருவிழா காலையில் அம்மன் தேரில் ஏறி பிற்பகலில் புறப்பாடு நடக்கும்.

தேர் புறப்பட்டு கண்மாய் வழியாகவே சென்று மாலையில் காட்டம்மன் கோயிலில் எழுந்தருளும். 9ம் நாள் திருநாளில் அங்கிருந்து புறப்பட்டு கோயில் வந்து சேரும். தேர் வரும் பாதை கண்மாய் பகுதியாக இருப்பதாலும், சில காலம் கண்மாயில் நீர் இருந்தால் நீரில் செல்ல நேர்வதாலும் முன்னோர்கள் வயிரத்தேர் செய்யாமல் சட்டத்தேராகவே செய்துள்ளனர்.

கரடு முரடான பாதையில் கண்மாய்க்குள் செல்லும்போது ஏற்படும் ஆட்டத்தால் பாதிப்பேற்படாமல் இருக்க இயற்கையான தையிலான் கொடி கொண்டு சட்டங்களை இணைத்துக்கட்டுதல் நுட்பமான அறிவுத்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது.

சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் கருவறையில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.

சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச்செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

கொப்புடையம்மனை வணங்கினால் எல்லாவகை நோய்களையும் தீர்த்து வைக்கிறாள்.

தவிர விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், கல்யாண வரம் வேண்டியும், குழந்தைச் செல்வம் வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

அம்மனுக்கு முழுக்காட்டு செய்தும் புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *