அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்

அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர், கேரளா மாநிலம்.

+91-487-255 6335, 255 6799, 255 6347, 255 6365 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர் உன்னி கிருஷ்ணன்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் குருவாயூர்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இங்கு குருவே ஒரு ஊரை எழுப்பியுள்ளார் என்றால் அங்கு இருக்க கூடியவர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.


வாயு பகவான் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் மாறுவார். கண்ணன் தென்றலாக இருப்பான் தன் பக்தர்களுக்கு. புயலாக மாறுவான் கவுரவர்களை போன்ற துஷ்டர்களை தண்டிப்பதற்கு. ஆக எல்லா வகையிலும் உயர்ந்த தலம் குருவாயூர். குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாகக் கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் துவாரகையில் வசித்தவர். துவாரகையை கடல் கொள்ளும் என்றும், அந்த சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும் என்றும், அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.

கண்ணன் சொன்னது போலவே நடந்தது. வாயு பகவான் கண்ணனின் கட்டளையை ஏற்று புயலாய் மாறினார். மழை கொட்டியது. கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவரிடம் இருந்த சிலை கடலில் மிதந்தது. குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும், வாயுவும் இவ்விதம் கண்ணனின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். எனவே கண்ணன் தான் குடியிருந்த அந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல் குருவுக்கும் வாயுவுக்கும் மதிப்பளிக்கும் வகையில் குருவாயூர்எனப் பெயர் சூட்டினார்.

கார்த்திகை முதல் நாள் முதல் மார்கழி 11 வரை 41 நாட்கள் மண்டல காலம் என்பர். இந்த மண்டல காலத்தில் வரும் ஏகாதசி சிறப்பு தரும். ஏனெனில் அர்ஜுனனுக்கு, பகவான் கிருஷ்ணன் கீதையை உபதேசித்து ஏகாதசி அன்றே.


குழந்தைக்கு முதன் முதலாக சோறூட்ட வேண்டும். எந்தக் கோயிலில் போய் ஊட்டினால் அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ருசியான சோறு கிடைக்கும் என கேட்டால் எல்லோருமே சொல்வது குருவாயூரைத் தான்.

ஏப்ரம் 14ம் தேதி சித்திரை விஷு. இந்த விழா இங்கு மிக சிறப்பு கொண்டாடப்படும். முக்கிய பண்டிகைகள் பல உண்டு. அனைத்து வைணவ பண்டிகைகளும் இங்கு நடக்கும். இங்கு விருச்சிக ஏகாதசி மிக முக்கியமான பண்டிகை. இந்த ஏகாதசிக்கு 18 நாட்கள் முன்னதாகவே விழா தொடங்கி விடும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்களால் யானைகள் காணிக்கையாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் பத்மநாபன், கஜராஜன், கேசவன் என்ற பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் போற்றப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு 52 யானைகள் உள்ளன. இங்கு யானை தான் சன்னதியை திறந்து வைக்கும். விழா காலங்களில் சுவாமியை யானையே சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானைதான் சுவாமியை சுமக்கும் பாக்கியத்தை பெறும். இப்படி பல்வேறு வித்தியாசமான நடைமுறைகள் இந்தக் கோயிலில் உண்டு.

இங்கு காலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு விடும். முதல் நாள் அணிந்த மாலை மற்றும் அலங்காரங்களுடன் பூஜை நடத்தப்படும். இதை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து 12 கால பூஜைகள் நடத்தப்படும். இந்தக் கோயிலுக்கு சித்திரை முதல் நாள் சென்று வருவது மிகுந்த சிறப்புக்குரியது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கை நீட்டம்வழங்கப்படும். அதாவது ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் மேல்சாந்தி வழங்குவார். கேரள அரசியல்வாதிகளுக்கு கை நிறைய காசு கொடுப்பது இப்போதும் வழக்கம். குருவாயூரப்பனின் அருளால் ஆண்டு முழுவதும் செல்வம் வற்றாமல் இருக்கும் என்பதே கை நீட்டத்தின் தத்துவம்.

குருவாயூரில் குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறான். உருவத்தில் தான் அவன் குழந்தை. ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன் அவன். குருவாயூர் கோயிலில் திருமணம் முடித்தவர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வர். இதனால் இங்கு தினமும் திருமணக் காட்சியைக் காண முடியும். இத்தலத்தில் பூஜைகள் மிகுந்த சாத்திரப்படியும், சித்த சுத்தியுடனும், இறைமாட்சிக்கு ஏற்றம் தரும் வகையில் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. உள்ளத்தாலும், மனதாலும், தூய்மையான புனித வாழ்வு நெறி அர்ச்சகர்களின் பணிக்காலத்தில் கடைபிடித்து அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் இத்தலத்தில் இறைவனின் திருவருளைப்பெற திருக்கோயிலில் உள்ள ருத்ர தீர்த்தத்தில் மூழ்கி ஈர ஆடைகளுடன் தரிசித்தால் பெரும் புண்ணியத்தை பெறுவர்.

திருவிழா:

சித்திரை விஷு, விருச்சிக ஏகாதசி

கோரிக்கைகள்:

குழந்தைகளுக்கு ருசியான சோறு கிடைக்க, தம்பதியினர் தீர்க்க ஆயுளுடன் வாழ, வெண்குஷ்டம் நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *