அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம்

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம் – 625 516. தேனி மாவட்டம்.
**************************************************************************************

+91- 99441 16258, 97893 42921.

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – கிணறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – கம்பம்

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

ஒருசமயம் இப்பகுதியில் மக்களுக்கு கொடிய நோய்கள் உண்டாகவே, மக்கள் அல்லலுற்றனர். அவ்வேளையில் பெண் ஒருத்தி கம்பத்துக்கு வந்தாள். தற்போது கோயில் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்ட அவள், நோயாளிகளை அழைத்து வேப்பிலையையும், மஞ்சளையும் கொடுத்தாள். அதனால் பலருக்கும் நோய் குணமாகியது. வியந்த மக்கள் அவளிடம், “எங்களுக்கு வைத்தியம் பார்க்கும் நீ யார்?” எனக்கேட்டனர்.

அவள் உடனே அம்பிகையாக சுயரூபம் காட்டினாள். பக்தர்களின் வேண்டுதலுக்காக இங்கேயே சுயம்பு வடிவில் எழுந்தருளினாள். பின்பு, சுயம்புவை சுற்றிக் கோயில் எழுப்பப்பட்டது.

பிற்காலத்தில் சுயம்பு அம்பிகைக்கு பின்புறம், மாரியம்மன் சிலை வடித்துப் பிரதிட்டை செய்து, கோயில் எழுப்பினர்.

பிரகாரத்தில் நாகர், அனுக்ஞை விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னதிகள் இருக்கிறது.

மருத்துவம் பார்த்த மாரி:

மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்துடன் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் சுயம்பு அம்பிகை லிங்க வடிவில் காட்சி தருகிறாள். சுயம்புவிற்கு அம்பாளின் முகத்தைப் போல அலங்காரம் செய்கிறார்கள். இவளைப் பூசித்த பின்பே, சிலை வடிவிலுள்ள அம்பிகைக்குப் பூசை செய்கின்றனர்.

அபிசேகம் செய்யும்போது மட்டுமே, சுயம்பு அம்பிகையை தரிசிக்க முடியும். பக்தர்களின் நோய் தீர்த்து அருளியவள் என்பதால் இவளை, “மருத்துவச்சிஎன்றே அழைக்கிறார்கள். தீராத நோய் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நோய் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.

குழந்தை இல்லாத பெண்கள் அம்பிகைக்கு வளையல் அணிவித்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

மாரியம்மன் சன்னதி எதிரில், கல் கம்பம் ஒன்று இருக்கிறது. இதை அம்பாளின் கணவராக பாவித்துப் பூசை செய்கிறார்கள்.

சித்திரை திருவிழாவின்போது மட்டும், மூன்று கிளைகளாக வளர்ந்த வேப்ப மரக்கிளையை மேளதாளத்துடன், அம்பிகையின் அருகில் வைத்து பூசிக்கின்றனர். அதன்பின்பு, கல் கம்பத்திற்கு அருகில் வைத்துவிடுவர். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, கம்பத்திற்கு மல்லிப்பூ, எலுமிச்சை மாலை அணிவித்து, மஞ்சள் நீராட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவஅம்பிகை:

மாரியம்மன், பராசக்தியின் ஒரு அம்சம் என்பர். இதனால் இவள் சக்தி ஆகிறாள். சிவமும், சக்தி ஒன்று என்ற அடிப்படையில், சிவராத்திரியன்று இரவில் இங்கு மாரியம்மனுக்கு, சிவனைப்போலவே அலங்காரம் செய்து, பூசிக்கின்றனர். அப்போது அம்பிகைக்கு நெற்றிக்கண் சூடி, தலையில் பிறைச்சந்திரன், கங்காதேவி, கையில் உடுக்கை, சூலம் ஆகியவற்றுடன், சிவனுக்குரிய புலித்தோல் நிறத்தாலான ஆடை அணிவித்து அலங்கரிப்பர். சிவனுக்குரிய முறைப்படி நள்ளிரவில் 6 கால பூசையும் நடக்கும். இந்த வேளையில் அம்பிகையைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.

உற்சவ அம்பாள், நான்கு தலை நாகத்தின் கீழ் காட்சி தருகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இவள் பல்லக்கில் எழுந்தருளி, பிரகார உலா செல்வாள். பெண்கள் மட்டுமே இந்த பல்லக்கை தூக்கிச் செல்வர். சித்திரை மாதத்தில் இவளுக்கு 21 நாட்கள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின்போது பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் அம்பிகையிடம் வேண்டிக்கொள்வர்.

அம்மை, வெப்பு நோய் மற்றும் உடல் பிணிகள் நீங்கவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

அம்பாளை வேண்டி கோரிக்கைகள் நிறைவேறியவர்கள் அதிகளவில் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். பூக்குழி இறங்கியும், முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *